மதுரை ரயில் விபத்து சம்பவம்.! தப்பி ஓடிய 5 பேரை தட்டி தூக்கிய போலீஸ்- ரகசிய இடத்தில் விசாரணை
மதுரையில் சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் தீயில் கருகி உயிரிழந்த நிலையில், தீ விபத்தின் போது அங்கிருந்து தப்பி சென்ற 5 சுற்றுலா நிறுவன ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா ரயில் பெட்டியில் தீ விபத்து
உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து தென் மாநிலங்களில் சாமி தரிசனம் செய்வதற்காக சுற்றுலா ரயிலில் சுமார் 65-க்கும் மேற்பட்ட பயணிகள் வந்துள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு புனிதத் தலங்களுக்கும் சென்றுள்ளனர். கடைசியாக நேற்று முன்தினம் நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு நேற்று அதிகாலை கன்னியாகுமரியில் இருந்து 3.45 மணியளவில் மதுரை வந்துள்ளனர்.
இதனையடுத்து மதுரை ரயில் நிலையத்தில் இருந்து 1 கிலோ மீட்டர் தூரத்தில் சுற்றுலா ரயில் பெட்டி நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது காலை உணவு தயாரிக்க சிலிண்டரை பற்ற வைத்த போது சிலிண்டர் வெடித்து சிதறியது. இதன் காரணமாக தூங்கிகொண்டிருந்த சுற்றுலா பயணிகள் புகை மூட்டத்தால் மூச்சு திணறியுள்ளனர்.
ரயிலில் சிலிண்டர்கள்- அடுப்புகள்
தீ விபத்தையடுத்து ஆன்மிக பயணிகள் அலறியடித்தபடி ரயிலில் இருந்து கீழே இறங்கிய நிலையில் இந்த தீ விபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து ரயிலில் போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, 3 சிலிண்டர்கள், மண்ணெண்ணெய் ஸ்டவ்வுகள், விறகுகள், பாத்திரங்கள் இருந்ததை கண்டறிந்தனர். ரயிலில் தீ பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், எப்படி ரயிலில் சிலிண்டர் வந்தது என விசாரணை தொடங்கியுள்ளது. இதனை ரயில் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டது எப்படி என்ற கோணத்தில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர். மேலும் ரயில் பெட்டியில் இன்று மீண்டும் சோதனை செய்த போது கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது. ரயில் பெட்டிகள் முழுவதுமாக எரிந்து எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.
சுற்றுலா ஊழியர்களிடம் விசாரணை
தீ விபத்து நடைபெற்ற போது ரயிலில் இருந்த சுற்றுலா ஏற்பாடு செய்த 5 ஊழியர்கள் தப்பி ஓடியதாக கூறப்பட்டது. அந்த ஊழியர்களை கண்டுபிடித்த போலீசார் மதுரை ரயிவ்வே மருத்துவமனையில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தீ விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஏ.எம்.சவுத்ரி சட்டரீதியான விசாரணை நடத்தி வருகிறார். அப்போது தடை செய்யப்பட்ட பொருட்களை ரயிலில் ஏன் கொண்டு வந்தீர்கள்.? சிலிண்டரை கொண்டு வந்தது யார்.? விறகுகள், சமையல் பாத்திரம் ரயிலுக்குள் கொண்டு வர அனுமதி கொடுத்தது யார் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்