பயிர்களுக்கு பூச்சி மருந்து தெளித்த விவசாயி மரணம்; வீரியம் அதிகமாக இருந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு...
பெரம்பலூர்
பெர்மபலூரில் நெற்பயிர்களுக்கு பூச்சிமருந்து தெளித்த விவசாயி பூச்சிமருந்தின் வீரியத்தால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ளது எழுமூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (45). இவர் ஒரு விவசாயக் கூலித் தொழிலாளி.
இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவருக்குச் சொந்தமான வயலில் நெற்பயிருக்கு நேற்று காலை பூச்சிமருந்து தெளித்துள்ளார். பூச்சிமருந்தின் தாக்கம் வீரியமாக இருந்ததால் தேவேந்திரன் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையறிந்த தேவேந்திரன் மனைவி வெள்ளையம்மாள் மருவத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். மருவத்தூர் காவல் உதவி ஆய்வாளர் தேவராஜ் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி செடிகளுக்கு பூச்சிக்கொல்லி தெளித்தபோது நான்கு விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் பூச்சிக்கொல்லியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுள்ளனர்.
"உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பூச்சிகொல்லி மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்" என்று அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால், எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.