திருடிய அம்மன் சிலையை அதே இடத்தில் திரும்ப வைத்த மர்மநபர்கள்; பூக்கள் தூவி பூசையும் நடத்தியுள்ளனர்...
வேலூரில் கெங்கையம்மன் சிலையை திருடிச் சென்ற மர்மநபர்கள் மீண்டும் அதே இடத்தில் சிலையை வைத்துவிட்டு பூக்கள் தூவி பூசையும் நடத்திவிட்டு சென்றுள்ள சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு காவல் நிலையம் அருகே உள்ள திருப்பதி கெங்கையம்மன் கோவிலில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பீடத்தை உடைத்து கெங்கையமமன் சிலையை திருடிச் சென்றனர்.
மறுநாள் காலையில் உள்ள வந்த பூசாரி அதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து பின் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
இதுகுறித்து பேரணாம்பட்டு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். காவலாளர்கள் விசாரணை நடத்தி வருவதை அறிந்த மர்மநபர்கள் நேற்று நள்ளிரவு யாரும் இல்லாத நேரத்தில் சிலையை எங்கிருந்து எடுத்துச் சென்றார்களோ அதே இடத்தில் வைத்துவிட்டு பூக்களை வைத்து பூசையும் நடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவலாளர்கள் கோவிலுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். உள்ளூரை சேர்ந்த யாரோதான் சிலையை திருடியிருக்க வேண்டும் என்றும் காவலாளர்களுக்குப் பயந்து சிலையை திரும்ப வைத்திருக்க வேண்டும் என்றும் யூகித்தனர்.