புதுக்கோட்டை
தமிழக மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தனது சொந்த ஊரில் பொங்கல் வைத்து பொங்கல் திருவிழாவைக் கொண்டாடினார்.
இந்த வருட பொங்கல் திருவிழாவை சரித்திரம் நினைவில் கொள்ளும் அளவிற்கு தெறிக்க விட்டிருக்கிறார்கள் தமிழர்கள். சல்லிக்கட்டுக்கு எதிராக வாய் திறந்தவர்கள் எல்லாம் காலில் விழாத குறையாக பாவ மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் தமிழர்கள்.
இதுவரை 3 நாளில் 30 இடங்களில் சல்லிக்கட்டு நடத்தப்பட்டு பொங்கல் திருவிழா கலைக் கட்டியுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டிற்கு இணையாக, உலகம் முழுவதும் தமிழர்களின் பொங்கல் திருவிழா புகழ் பெற்று விளங்குகிறது. சல்லிக்கட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பீட்டாவின் சொந்த நாடான அமெரிக்காவில் கூட சல்லிக்கட்டும், பொங்கல் விழாவும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை கேட்டதுபோய், சல்லிக்கட்டு நடத்தப்படும் என்ற உணர்வு பீறிட்டு வெளிவந்தது.
அரசியல்வாதிகளை இனி நம்பி பயனில்லை என்ற முடிவுக்கும் தமிழக மக்கள் வந்துவிட்டனர். சாதி, மதம் கடந்து தமிழர்களாய் ஒன்றிணைந்து சல்லிக்கட்டு நடத்தப்பட்டு பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தின் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் ராப்பூசலுக்கு சென்றுள்ளார். அங்கு தன் குடும்பத்துடன் பொங்கல் விழாக்களை கொண்டாடியுள்ளார்.
தை முதல் நாளன்று குடும்பத்துடன் பொங்கல் வைத்து கொண்டாடிய அமைச்சர் தை இரண்டாம் நாளில் தங்கள் வீட்டு பசுக்களுக்கு குடும்பத்துடன் நின்று பச்சரிசி, பழங்கள் கொடுத்து மாட்டுப் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார்.
