புயலாக மாறுகிறது காற்றழுத்த தாழ்வு ; அதற்கு பெயர் ’சாகர்’ - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...!
தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, தென்மேற்கு வங்க கடல் பகுதியில் தமிழக கரைக்கு அப்பால், மேலடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெற்கு அந்தமான் பகுதியில் தொடர்ந்து வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.
டிச.,6 வரையிலான காலகட்டத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், தெற்கு ஆந்திர கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் மழை அளவை பொறுத்தவரையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதிகமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் 23 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாகவும் தமிழகம், புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் ஏறத்தாழ 17 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அடுத்த 24 மணி நேரத்தில், தமிழகம் புதுச்சேரியில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை புறநகரில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்தார்.
புதிய புயல் உருவானால் அதற்கு சாகர் என்று பெயர் சூட்டப்படும் எனவும் புதிய புயலுக்கு இந்தியா பெயர் வைத்துள்ளது எனவும் அதாவது சாகர் என்றால் கடல் என்று அர்த்தம் எனவும் தெரிவித்தார்.