The judge mother attacked the staff

திருச்சி

சமையலின்போது பருப்பு குழைந்ததால் பெண் உதவியாளரில் தோள்பட்டையில் நீதிபதியின் தாயார் தோசை கரண்டியால் சூடு போட்டுள்ளார். சூடுபோட்ட நீதிபதியின் தாயார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி அருகே உள்ள பெட்டவாத்தலையைச் சேர்ந்தவர் நிர்மலா (25). இவர் திருச்சி நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரை ஒரு பெண் நீதிபதியின் வீட்டில் சமையல் வேலைக்கு பயன்படுத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பெண் நீதிபதி வீட்டில் நிர்மலா சமையல் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அடுப்பில் வேக வைத்த பருப்பு குழைந்துவிட்டதால் ஆத்திரமடைந்த நீதிபதியின் தாயார் தீயில் காயவைத்த தோசை கரண்டியால் நிர்மலாவின் தோள் பட்டையில் சூடு போட்டுள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

தோள்பட்டையில் சூடு வைக்கப்பட்டதால் காயமடைந்த நிர்மலா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார். பின்னர், சக ஊழியர்கள் மற்றும் நீதித்துறை அதிகாரிகளிடம் நடந்த சம்பவம் குறித்து நிர்மலா தெரிவித்துள்ளார்.

இதனால் நீதிமன்றம் வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது. மேலும், நிர்மலா மீது சூடு வைத்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருச்சி நீதிமன்ற வாசல் முன்பு நேற்று மாலை தமிழ்நாடு நீதித்துறை அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்டத் துணைத் தலைவர் தனபால் தலைமைத் தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநிலத் தலைவர் கருணாகரன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணை தலைவர் இலட்சுமணன், இணைச் செயலாளர் மாணிக்கம், வட்டச் செயலாளர் பால்பாண்டி, நீதித்துறை ஊழியர் சங்க இணைச் செயலாளர் ஆரோக்கியராஜ் உள்பட நிர்வாகிகள் பேசினர்.

இதில் நீதிமன்ற ஊழியர்கள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பின்னர், நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் மாவட்ட செசன்சு கோர்ட்டு நீதிபதி குமரகுருவை சந்தித்து நிர்மலாவுக்கு சூடு போட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.