The intensity of work seeking a teenager
திருச்சி, தலைமலையில் உள்ள பெருமாள் கோயில் பிரகாரத்தை சுற்றி வரும்போதும் தவறி விழுந்த ஆறுமுகம் என்ற இளைஞரை போலீசார் இன்று இரண்டாவது நாளாக தேடி வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே தலைமலையில் சஞ்சீவி பெருமாள் கோயில் உள்ளது. இந்த சஞ்சீவி பெருமாள் கோயில், 4500 அடி உயரத்தில் உள்ளது. இங்கு வரும் பக்தர்கள், சாமி தரிசனம் செய்தும் தங்களின் நேர்த்திக் கடனை செலுத்தியும் வழிபட்டு வருகின்றனர்.

இந்த மாதம் புரட்டாசி என்பதால் சஞ்சீவி பெருமாள் கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் வருகை தந்துள்ளனர். அப்படி வரும் பக்தர்கள் மலை உச்சியில் அமைந்துள்ள பெருமாள் கோயிலின் பிரகாரத்தை சுற்றி வருவார்கள்.
கோயில் பிரகாரத்தை சுற்றி வருவதற்கு இரண்டு அங்குல இடம் மட்டுமே உள்ளது. ஆபத்தான இந்த வழியில்தான் பக்தர்கள் கோயில் பிரகாரத்தை சுற்றி வருகின்றன.
இந்த மலைப் பாதையில் கோயில் பிரகாரத்தை சுற்றி வர வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் அங்கு எச்சரிக்கை பலகையும் வைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பக்தர்கள் நிர்வாகத்தின் எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், இரண்டே அங்குலம் உள்ள ஆபத்தான பாறை வழியில், கோயிலைச் சுற்றி வருகின்றனர். அதாவது மலை உச்சியில் கோயிலின் சுற்றுப்பிரகார விளிம்பில் 2 அடி அங்குலம் உள்ள சுவரை பிடித்து கொண்டு பக்தர்கள் சுற்றி வருகின்றனர்.
நேற்று முசிறியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ஆறுமுகம். குழந்தை வரம் வேண்டி சஞ்சீவ பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, பிரகாரத்தை சுற்றி வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல், நேற்றும் சாமி தரிசனம் செய்த ஆறுமுகம், கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். இரண்டு முறை கோயில் பிரகாரத்தை சுற்றிய அவர், மூன்றாவது முறை சுற்றி வரும்போது, தவறி கீழே விழுந்தார்.
இதைப் பார்த்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே கோயில் நிர்வாகத்துக்கு அவர்கள் தகவல் அனுப்பினர். போலீஸ் நிலையத்துக்கும் தகவல் அனுப்பப்பட்டது.
தகவல் அறிந்து வந்த நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீசார், வனத்துறையினர் மற்றும் சில இளைஞர்கள், ஆறுமுகத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல் நிலையம் எல்லைப் பிரச்சனை காரணமாக ஆறுமுகத்தை தேடும் பணி தாமதமாகவே தொடங்கப்பட்டுள்ளது.

திருச்சி - தலைமலை போலீசாருக்கும், நாமக்கல் - எருமப்பட்டி போலீசாருக்கும் இடையே எல்லைப் பிரச்சனை காரணமாக ஆறுமுகத்தை தேடும் பணியில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

கோயில் அமைந்துள்ள பகுதி திருச்சியில் மாவட்டத்தில் அமைந்திருந்தாலும், கோயிலுக்கு அருகில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காவல் நிலையம் உள்ளது. இதனால் காவல் நிலையத்திடையே எல்லை பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதனால் மீட்பு பணி தாமதமாக தொடங்கப்பட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
இதைனையடுத்து, ஆறுமுகத்தை தேடும் பணியில், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி போலீசார், வனத்துறையினர் மற்றும் புளியம்பட்டி, கள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஈடுபட்டனர்.
நேற்று இரவு நேரம் வரை தேடும் பணியை போலீசார் நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக ஆறுமுகத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

கோயில் பிரகாரத்தைச் சுற்றி வருவது ஆபத்தானது என்றும் இது தொடர்பாக அறநிலையத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். உயிருக்கு உலை வைக்கும் இந்த ஆபத்தான பாதையை, பக்தர்கள் சுற்றி வரக் கூடாது என்றும் அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
ஆறுமுகத்தை தேடும் பணி இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வரும் நிலையில், அவரின் சகோதரி பேபி, என் தம்பியைக் காப்பாற்றி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
