அரசு பேருந்து ’ஹார்ன் சவுண்டு’ கேட்டாலே பைக் எல்லாம் தானா ஓரங்கட்டுது...!
ஊதிய உயர்வு கோரி பஸ் டிரைவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தப்போராட்டம் ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
மேலும் போக்குவரத்து ஊழியர்கள் கேட்ட ஊதிய உயர்வை அளிக்க முடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
ஆனால் கேட்டதை தராமல் வண்டியை எடுக்க நாங்களும் முன்வர மாட்டோம் என தொழிலாளர் சங்கங்கள் தெரிவித்து வருகின்றனர். இரு தரப்புக்கும் இடையே நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமுமின்றி இழுபறி நிலை நீடித்து வருகிறது.
மக்களின் அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டுவர அரசு தற்காலிக ஊழியர்களை நியமித்து பேருந்துகளை இயக்கி வருகின்றது.
தற்காலிக ஊழியர்களை வைத்து பேருந்து இயக்குவதால் ஆங்காங்கே பல பேருந்துகள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. இதில் பலர் படுகாயங்களும் அடைகின்றனர்.
இதுகுறித்து போக்குவரத்து துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பியபோது நாங்கள் எதையாவது செய்து மக்களின் கஷ்டத்தை போக்க வேண்டும், அல்லது வேறு ஐடியா இருந்தாலும் கொடுங்கள் என கேள்வி எழுப்பினார்.
இதைதொடர்ந்து போக்குவரத்து ஊழியர்கள் இன்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதை தடுக்க முயன்ற போலீசாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே அங்காங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
தற்காலிக ஓட்டுனர் பணியில் பெரும்பாலும் லாரி ஓட்டுநர்களும் முன் அனுபவம் இல்லாத ஓட்டுனர்களையும் வைத்தே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் மக்கள் பேருந்துகள் பக்கம் செல்லவே பயப்படுகின்றனர்.
கூவி கூவி அழைத்தாலும் மக்கள் பேருந்துகளில் ஏறுவதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகின்றது. ரூ.100 கொடுத்து ஆட்டோவில் போனாலும் போவேனே தவிர அரசு பேருந்தில் ஏறமாட்டேன் என சிலர் வைராக்கியத்துடன் இருக்கின்றனர்.
காரணம் முன் அனுபவம் இல்லாத ஓட்டுநர்கல் பேருந்தை இயக்கி விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. தமிழக அரசு நீதிமன்றத்தின் மூலம் எச்சரிக்கை விடுத்தும் போக்குவரத்து ஊழியர்கள் அச்சப்பட்டதாக தெரியவில்லை.
எனவே அரசு பேருந்து ஹார்ன் சவுண்டு கேட்டாவே அனைவரும் ஆம்புலன்ஸ்க்கு வழி விடுவது போல ஆட்டொமேட்டிக்காக வழி விட்டுவிடுகின்றனர் என்பதே தற்போது நிதர்சன உண்மையாக இருக்கிறது.