தனியார் பள்ளிக் கூடத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் - சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ - மாணவிகள்...
அரியலூர்
அரியலூரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் மாவட்டம், சுந்தரேசபுரம் கிராமத்தில் 1965-ஆம் ஆண்டு அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி தொடங்கப்பட்டு இயங்கி வருகிறது.
இந்தப் பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியை நரியங்குழி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம் (95) என்பவர் நடத்தி வந்தார்.
இதனையடுத்து மக்கள் அவரிடம் பள்ளியை அரசே எடுத்து நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர். இதற்கு தர்மலிங்கமும் ஒப்புக் கொண்டார்.
இதனிடையே தர்மலிங்கம் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பள்ளியை அரசு எடுத்து நடத்த எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் மக்கள் பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கூறி அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலத்தில் தா.பழூர்- அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமங்கலம் காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் சாலை மறியலை கைவிடவில்லை.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, தா.பழூர் உதவி தொடக்க கல்வி அதிகாரி கலியபெருமாள், சுத்தமல்லி வருவாய் ஆய்வாளர் விமலா ஆகியோர் அங்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று கூறியதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர்.
இந்த சாலை மறியலால் தா.பழூர்-அரியலூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துபாதிக்கப் பட்டது.