அச்சோ நெஞ்சுவலி...! - போலீசுக்கு டிமிக்கி கொடுத்து அரசியல்வாதியை பின்பற்றும் ஜாக்டோ ஊழியர்...!!
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட அரசு ஊழியர் முருகன் நெஞ்சுவலி என கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியர்கள் போராட்டம் குறித்த வழக்கு ஒன்று இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், ஜாக்டோ ஜியோ - ஆசிரியர்கள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்த அரசியல் கட்சிகள், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து எந்தக் கேள்வியும் எழுப்பாதது ஏன் என கேள்வி எழுப்பினார்.
மேலும், கன்னியாகுமரியில் பள்ளிக்கு வந்த மாணவர்களைத் திருப்பி அனுப்பிய ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? அரசியல்வாதிகளை விமர்சிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏன்?
அரசு அதிகாரிகள் கேள்விகள் கேட்பதால், நீதித்துறை மீதான விமர்சனங்களை ரசிக்கிறார்களா?
கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறையை விமர்சனம் செய்வதை ஏற்க முடியாது. சமூக இணைய தளங்களில் நீதிபதிகளை விமர்சித்தவர்கள் யார் எனக் கண்டறிய வேண்டும்.
ஹெல்மெட், டாஸ்மாக் குறித்த உத்தரவுகள் வெளியிட்ட போது, அவை தொடர்பாக என் மீது அதிகம் விமர்சிக்கப்பட்டது. இவ்வாறு விமர்சனம் செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அக்டோபார் 4ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி கிருபாகரன் கூறினார்.
இதை அடுத்து, அரசுத் தரப்பில் எடுத்த நடவடிக்கை குறித்து அளிக்கப்பட்ட விளக்கத்தில், நீதித்துறையை விமர்சனம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது தொடர்பாக, நெல்லையைச் சேர்ந்த முருகன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அரசு ஊழியர் முருகன் நெஞ்சுவலி என கூறி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.