Asianet News TamilAsianet News Tamil

40 ஆண்டுகளாக செயல்பட்டுவந்த நிதி நிறுவனம் திடீர் மூடல்; ரூ.300 கோடி வரை மோசடி செய்துவிட்டு நிறுவனர் தலைமறைவு…

The financial institution suddenly closing for 40 years Rs.300 crore fraud and founder undercover
the financial-institution-suddenly-closing-for-40-years
Author
First Published May 15, 2017, 6:58 AM IST


தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் திடிரென்று மூடப்பட்டது. சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்துவிட்டு நிறுவனர், அவரது மனைவி, தலைமறைவானதால் மக்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ளது ஆடுதுறை இரயில்வே சாலை. இங்கு திருமங்கலக்குடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார்.

டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு 18 முதல் 22 சதவீதம் வரை வட்டி வழங்கப்பட்ட இந்த நிறுவனத்தில் தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பணத்தை டெபாசிட் செய்திருந்தனர்.

கடந்த சில மாதங்களாக வாடிக்கையாளர்களுக்கு குறிப்பிட்ட தேதியில் வட்டி மற்றும் முதிர்வு தொகை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த மாதம் 1-ஆம் தேதி நிதி நிறுவனம் திறக்கப்படாமல் இருந்தது.

மேலும், உரிமையாளரையோ, பணியாளர்களையோ தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. இதனால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

பலரது பத்திரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களும் இந்த நிறுவனத்திடம் உள்ளதால் வாடிக்கையாளர்கள் பூட்டப்பட்ட நிறுவனத்தினை மேலும் யாரும் திறந்துவிடாமல் இருக்க கூடுதலாக பூட்டு போட்டு பூட்டியுள்ளனர்.

சுமார் ரூ.300 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை கைது செய்து பணத்தை மீட்டு தரும்படி மக்கள் மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகார் அளித்து பல நாட்களாகியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நிதி நிறுவனத்தின் முன்பும், ஊழியர்களின் வீடுகளின் முன்பும் மக்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர்.

இந்த நிலையில் தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு காவலாளர்கள் நிதிநிறுவன உரிமையாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி விஜயநிர்மலா ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நேற்று காலை மக்கள், தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளர் மற்றும் ஊழியர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தனியார் நிதிநிறுவனத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, “நாங்கள் செலுத்திய பணம் மற்றும் ஆவணங்களையும் மீட்டு தரவேண்டும்” என முழக்கங்கள் எழுப்பினர். இதில் 50 பெண்கள் உள்பட சுமார் 300 பேர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருவிடைமருதூர் துணை காவல் கண்காணிப்பாளர் வெங்கடேசன் தலைமையில் ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் காவலாளர்கள் நிகழ்விடத்திற்கு வந்த பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தலைமறைவாக உள்ள நிதி நிறுவன உரிமையாளரை கைது செய்து பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணை காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்தார்.

அதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios