’குடி’மகன்களே உங்களுக்காக...! விபத்து ஏற்படுத்தினால் 7 ஆண்டு ஜெயில்...!
குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழக்க நேரிட்டால் 7 ஆண்டு வரை சிறை தண்டனை வழங்க மத்திய அரசு புது மசோதாவை கொண்டு வந்துள்ளது. இதற்காக மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் அரசு முடிவு செய்துள்ளது.
சமீபகாலமாக குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால் விபத்துகளின் அதிகரித்த வண்ணம் உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தினால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
இதனை மாற்றியமைக்க வேண்டும் என்றும், சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டு இருந்தன.
மேலும் குடிபோதையில் உயிரிழக்க செய்தால் தற்போது உள்ள தண்டனை போதுமான தண்டனையா என உச்சநீதிமன்றம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தது.
இதையடுத்து குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்துவோருக்கு 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு, போக்குவரத்து துறை அமைச்சகத்திற்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இத்தகைய குற்றத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு புதிய மசோதா ஒன்றை இயற்ற உள்ளது.
அதன்படி குடித்துவிட்டு வாகனம் ஓட்டி உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில் வாகன ஓட்டிக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.