கதிராமங்கலம் போராட்ட விவகாரம் - பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமின்
கதிராமங்கலம் போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது. பேராசிரியர் ஜெயராமன், மதுரை நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே கதிராமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் பெட்ரோல் - கேஸ் எடுக்கப்பட்டு வருகிறது.
இதனால் நிலத்தடிநீர் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் புகார் கூறி வந்தனர். ஆனால், இதனை தடுப்பதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைதொடர்ந்து கடந்த ஜூன் மாதம் ராட்சத இயந்திரங்கள் மூலம் புதிய விரிவாக்க பணிகளில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் ஈடுபட்டது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட பேராசியரியர் ஜெயராமன் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி கடையடைப்பு, உண்ணாவிரதம் என பொதுமக்கள் தொடர் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேற வேண்டும். 10 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை போலீசார் திரும்பப் பெற வேண்டும்.
அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் தொடர்ந்து போராடி வந்தனர்.
இதற்கிடையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜெயராமன் உள்பட 10 பேரையும் ஜாமீனில் விடக்கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் பேராசிரியர் ஜெயராமனுக்கு மட்டும் ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிறையில் உள்ள 9 பேரை, ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என மீண்டும் மனு தாக்கல் செய்தனர். ஓ.என்.ஜி.சி. பொருட்கள் சேதப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் நேற்று 9 பேருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
இன்று ஜாமின் மனு மீதான தொடர் விசாரணையில், கதிராமங்கலம் போராட்ட வழக்கிலும் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. பேராசிரியர் ஜெயராமன் உட்பட 8 பேருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜெயராமன், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் மற்ற 7 பேரும் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.