கோவை கார் வெடி விபத்து..! ஆர்பாட்டங்கள், போராட்டங்களுக்கு தடை விதிக்க திட்டம்..? காவல் ஆணையர் தகவல்
ஜமாத்துகள் மட்டுமல்ல அனைத்து மதத்தினருடன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்த கோவை மாவட்ட ஆணையர் பாலகிருஷ்ணன், கோவை பகுதி தற்போது அமைதியாக உள்ளதாகவும் தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டம் ,போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் என கூறினார்.
கோவை கார் சிலிண்டர் வெடி விபத்தை தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை கோவை பகுதியில் நிலவி வருகிறது. இந்தநிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஜமாத் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் காவல் துறை , வருவாய்துறை உயர் அதிகாரிகளும் கோவையில் உள்ள அனைத்து ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அனைத்து ஜமாத்துகளுடன் ஆலோசனை நடத்தி இருப்பதாகவும், அசம்பாவித தகவல்கள் ஏதாவது இருந்தால் காவல் நிலையத்திற்க்கும் , மாவட்ட நிர்வாகத்திற்கும் தகவல் அளிக்கும்படி ஜமாத் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார். ஜமாத் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பைக் வழங்கியிருக்கிறார்கள் என தெரிவித்த அவர், ஓவ்வொரு ஏரியா வாரியாக கூட்டம் நடத்த இருப்பதாகவும், பாஜக அறிவித்த பந்த் தொடர்பாக எந்த தகவலும் மாவட்ட நிர்வாகத்திற்கு வரவில்லை எனவும் மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்தார்.
இதனைதொடர்த்து பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் , கோவை மாநகரைக் பொறுத்தவரைக்கும் பாதுகாப்பு பலபடுத்தபட்டுள்ளது என தெரிவித்தார். கூடுதலாக போலீஸார் ரோந்து பணியில் இருக்கின்றனர் எனவும், உளவுத்துறையை இன்னும் அடிமட்டத்தில் இருந்து பலபடுத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். கோவை கார் வெடி விபத்து வழக்கு NIA வுக்கு மாற்றுவது குறித்து முறையான தகவல்கள் வந்ததும் அதுகுறித்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஜமாத்துகள் மட்டுமல்ல அனைத்து மதத்தினருடன் அமைதி பேச்சுவார்த்தை தொடர்ந்து நடத்தப்படும் எனவும் தெரிவித்த அவர், கோவை தற்போது அமைதியாக உள்ளதாகவும் தேவைப்பட்டால் ஆர்ப்பாட்டம் ,போராட்டங்களுக்கு தடை விதிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.