கிருஷ்ணகிரி,

ரூ.400 கையூட்டு வாங்கிய வழக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.400 அபராதமும் விதித்து கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தர்கா அண்ணாமலை நகரைச் சேர்ந்தவர் அனிதா (26). இவர் தூத்துக்குடியில் உள்ள தனது வேலைவாய்ப்பு பதிவை கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றிட கோரி கடந்த 2007–ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28–ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்குச் சென்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அப்போது அங்கு பணியில் இருந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக இளநிலை உதவியாளர் பூவையம்மாள் (49) என்பவர், அவ்வாறு மாற்றிட ரூ.400 கையூட்டு கேட்டுள்ளார்.

இதுகுறித்து அனிதா கிருஷ்ணகிரி மாவட்ட இலஞ்ச ஒழிப்பு காவலாளர்களுக்கு புகார் அளித்தார்.

இலஞ்ச ஒழிப்பு காவலாளர்கள் ஆலோசனையின்பேரில் பூவையம்மாளிடம் ரூ.400–ஐ அனிதா வழங்கினார். அப்போது காவலாளர்கள் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

இந்த வழக்கு கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

இதன் விசாரணை முடிந்த நிலையில் நேற்று நீதிபதி ஜீவானந்தம் தீர்ப்பு வழங்கினார்.

அந்த தீர்ப்பில், “ரூ.400 இலஞ்சம் வாங்கிய பூவையம்மாளுக்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.400 அபராதமும் விதிக்கப்படுகிறது” என்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் தண்டனைப் பெற்றுள்ள பூவையம்மாள் தற்போது சென்னையில் உள்ள வேலைவாய்ப்பு இயக்குனரகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.