கலைஞர் மகளிர் உரிமை தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் செப்டம்பர் 15 ஆம் தேதி அண்ணா பிறந்தநாளன்று காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்

மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம்

சட்டபேரவை தேர்தலின் போது தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி நடைபாதையில் வணிகம் செய்யும் பெண்கள், வேளாண் பணிகளில் ஈடுபடும் பெண்கள், மீனவ பெண்கள் உள்ளிட்டோர் உள்பட தகுதிபடைத்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கிடைக்கும் வகையில் 1 கோடி பேருக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த போவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். 

இந்த திட்டத்துக்கு கடந்த பட்ஜெட்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பி இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு கீழ் இருக்கும் குடும்பத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விண்ணப்பம் பதிவு செய்யும் பணியை முதலமைச்சர் ஸ்டாலின் தரும்புரியில் தொடங்கிவைத்தார். இதனை தொடர்ந்து இந்த திட்டத்துக்கான விண்ணப்பம் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் பொது மக்களுக்கு வீடு வீடாக வழங்கப்பட்டுள்ளது. தற்போது சிறப்பு முகாம்களில் பொது மக்கள் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை வழங்கி வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் இது வரைசுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 5 லட்சம் பேர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்து உள்ளனர்.

இந்த மாதம் 28-ந் தேதி வரை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க கால அவகாசம் கொடுக்கபட்டுள்ளது. இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்படும் குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இதற்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குசென்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகளை பிரம்மாண்டமாக நடத்த அரசு சார்பில் ஆலோ சிக்கப்பட்டு வருகிறது.