டாஸ்மாக் கடைகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாலுகா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்க கோரி அப்பகுதியைச் சேர்ந்த அருண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விக்னேஷ் , மனுதாரரின் கோரிக்கையை ஏற்று விவசாய நிலத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

அதனைத் தொடர்ந்து அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகர் பகுதி விளை நிலம் என்பதால் அங்கு டாஸ்மாக் கடை திறக்கப்படாது என்றும், சட்டப்படி உரிய இடத்தில் அமைக்கப்படும் என்றும் வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழ்நாடு சில்லறை மது விற்பனை விதிகளின்படி டாஸ்மாக் நிர்வாகம் மதுபான கடைகளை திறக்கலாம் என்றும், ஆனால் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும் மனுதாரர் குறிப்பிட்டுள்ள விவசாய நிலத்தில் உள்ள கடையை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
