"எங்கள் குடும்பத்துக்கு எதிராக சிபிஐயை தூண்டி விடுகிறது பாஜக" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கி விவகாரத்தில் தனக்கும், தன் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராகவும் பாஜக சிபிஐ என்னும் அஸ்திரத்தை ஏவி வருவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது, INX என்ற வெளிநாட்டு செய்தி நிறுவனத்துக்கு முறைகேடாக இந்தியாவில் அனுமதி அளித்ததற்காகஅவரது மகன் கார்த்தி சிதம்பரம், 90 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது. இதன் அடிப்படையில் சிதம்பரத்தின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 14 இடங்களில் தற்போது சோதனை நடைபெற்று வருகிறது.
இது குறித்து சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக கோப்புகளில் 5 செயலாளர்கள் கையொப்பம் ,இட்டுதான், அனுமதி வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கும் இந்த விவகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அனுமதி அளித்த செயலாளர்கள் மீது குற்றம் சுமத்தாமல், தன் மீதும், தனத மகன் கார்த்தி மீதும் குற்றம் சாட்டுவது மத்திய அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
பாஜக சிபிஐ அமைப்பை தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ள சிதம்பரம், இதை சட்டப்படி எதிர் கொள்வேன் என கூறினார்.
தன்னை அடக்க நினைக்கும் பாஜகவுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.