டெங்குவால் மறைந்து (மறந்து) போன ப்ளூவேல்! - கட்டுப்படுத்தப்பட்டதா? கண்டுகொள்ளவில்லையா?
சிவகாசி அருகே ப்ளூவேல் கேம் விளையாடி 18 வயது இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெகதீஷ் என்னும் இளைஞர் ப்ளூவேல் கேம் விளையாடி கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சில நாட்களுக்கு முன்பு ப்ளூவேல் என்ற தற்கொலையை தூண்டும் வகையில் புதிய கேம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனால் தமிழகத்தில் பலபேர் தற்கொலை செய்து கொண்டனர்.
அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து மீடியாக்களும் ப்ளூவேல் கேம் பற்றியே பேச தொடங்கின. இதையடுத்து ப்ளூவேல் கேம் அட்மினை கைது செய்தனர். ஆனாலும் தற்கொலைகளை காவல்துறையால் தடுக்க முடியவில்லை.
இதையடுத்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல்துறையால் நடத்தப்பட்டன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் அடுத்தகட்டமாக டெங்கு காய்ச்சல் புதிய அவதாரமாக உருவெடுத்தது. பல உயிர்களை டெங்கு காவு வாங்கியது.
மீடியாக்களின் குறியும் ப்ளூவேலை விட்டு டெங்குவை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது. இதுவரை டெங்குவுக்கு தமிழகத்தில் மட்டும் 40 க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகாசி அருகே ப்ளூவேல் கேம் விளையாடி 18 வயது இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ப்ளூவேல் கேம் தற்போது என்ன ஆனது என்பது தெரியாமல் அப்படியே அடங்கிவிட்டது.
சினிமாவில் பல அரசியல்வாதிகள் சொல்வது போல் ஒரு பரபரப்பில் இருந்து அடுத்த பரபரப்பு வந்துவிட்டால் மக்கள் முதலில் வந்ததை மறந்து விடுவார்கள் என்பது போல் தான் இந்த ப்ளூவேல் கேமின் நடவடிக்கையும் உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது.
இத்தகைய சந்தேகம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.