Karur Stampede: கரூர் சம்பவம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகள் விளக்கியது ஏன்? என இபிஎஸ் கேள்வி கேட்டிருந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், திமுகவினரும், தவெகவினரும் மாறி மாறி குற்றம்சாட்டி வருகின்றனர். கரூர் விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய், முதல்வர் ஸ்டாலினை குற்றம்சாட்டி இருந்தார். இதனைத் தொடர்ந்து கரூரில் என்ன நடந்தது? என்பது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா செய்தியாளர்களிடம் ஆதாரத்துடன் விளக்கினார்.
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
இதற்கு கண்டனம் தெரிவித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ''மக்களைப் பாதுகாப்பதில் ஏற்பட்ட தங்களின் தோல்வியை விரைவாக மறைத்து, இந்த விபத்திற்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாகத் தெரிகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் போன்றோர் இருக்கும்போது, வருவாய் செயலாளர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்ன?'; என்று கூறியிருந்தார்.
தங்கம் தென்னரசு பதிலடி
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தங்கம் தென்னரசு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கை அவரது பதட்டத்தை வெட்ட வெளிச்சமாகக் காட்டியிருக்கின்றது. எவ்வகையிலாவது இத்துயர்மிகு சம்பவத்திலிருந்து அரசியல் லாபம் பெற முடியுமா என்று துடியாய்த் துடிப்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரிகின்றது.
உளறல் அறிக்கை
செய்தியாளர் சந்திப்பில் உண்மைகள் உணர்த்தப்படும் போது, அவரால் அதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தத்தளித்து வழக்கம் போலவே ஓர் உளறல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கரூரில் நடந்த கொடுந்துயரத்திற்குக் காரணம் என்னவென்பதை அரசு அமைத்திருக்கும் ஆணையமும் காவல் துறை விசாரணையும் முறையாக வெளிக்கொணரும் எனச் செய்தியாளர்களிடம் அரசு அதிகாரிகள் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளனர்.
என்ன தவறு இருக்கிறது?
நடைபெற்ற ஒரு பெரும் துயரச் சம்பவம் குறித்தான உண்மை நிலவரங்களை அரசின் உயர் அலுவலர்கள் நாட்டு மக்களுக்கு விளக்கிச் சொல்வதில் என்ன தவறு இருக்கின்றது? அரசின் முக்கிய அங்கமாக விளங்கும் அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் அத்தகு விளக்கங்களைச் செய்தியாளர்கள் வாயிலாக வெகுமக்களுக்கும் சென்றடையச் செய்வது இத்தகுச் சூழலில் அவர்களின் கடமை என்பதை எதிர்க்கட்சித் தலைவர் தன் வசதிக்காக மறந்துவிட்டு அறிக்கை வெளியிட்டு இருக்கின்றார்.
நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து...
நள்ளிரவில் செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிட்டு, மக்களிடம் விளக்கமளிக்காமல் ஓடி ஒளியும் அதிமுக அரசைப் போல இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் இயங்கும் அரசு இது என்பதைத் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அரசியல் ஆதாயம் தேடுவதைத் தவிர்த்து, பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை மதித்து நடந்துகொள்வது எதிர்க்கட்சிகளின் கடமையும் கூட என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்'' என்றார்.
