நான் திரும்ப வந்துட்டேன்னு சொல்லு: தீபா பேரவையினுள் மீண்டும் கால் வைத்த ஆயில் ராஜா.
போன மச்சான் திரும்ப வந்துவிட்டார் தீபா பேரவையில். யெஸ்! கடந்த சில வாரங்களுக்கு முன் தீபாம்மாவால் அம்மாம் பெரிய கழகத்திலிருந்து நீக்கப்பட்டிருந்த ராஜா மீண்டும் இன்று கழகத்தினுள் இணைக்கப்பட்டிருக்கிறார். அதுவும் சாதாரணமாக இல்லை, ’தலைமை நிலைய மாநில செயலாளர்’ எனும் தாறுமாறான பதவியுடன், ஏகபோக அந்தஸ்துடன் கட்சிக்குள் இணைக்கப்பட்டிருக்கிறார்.
ஜெ., மறைவுக்குப் பிறகு கீழே விழுந்த பக்கோடா பொட்டலம் போல் அ.தி.மு.க. சகட்டுமேனிக்கு சிதறிக் கிடக்கிறது. இதில் தினகரன் டீம், எடப்பாடி டீம், என்னதான் எடப்பாடியுடன் இருந்தாலும் கூட தனியாவர்த்தனம் செய்யும் பன்னீர் டீம் என ஆளாளுக்கு சீரியஸ் பாலிடிக்ஸ் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதாவை வைத்துக் கொண்டு அடிக்கடி கிச்சுகிச்சு பாலிடிக்ஸ் செய்யும் ஒரே ஆத்மா, அவரது அண்ணன் மகளான தீபாதான்.
தீபாவுக்கு என்னதான் மாதவன் எனும் ஒரு கணவர் இருந்தாலும் கூட. பொதுவெளியான அரசியல் பாதையில் அவருக்கு துவக்கத்திலிருந்து காவலனாகவும், வழிகாட்டியாகவும் இருந்தது அவரது பள்ளி நண்பரான ராஜாதான். ராஜா கீச்சுன கோட்டை தாண்டி பேபிம்மா அந்தாண்ட, இந்தாண்ட நகருவதில்லை. இதில் கணவர் மாதுக்குட்டிக்கு ஏக டென்ஷன்.
தீபாவிடம் அதிகாரம் செலுத்துவதில் ராஜா மற்றும் மாதவன் இருவருக்குமிடையில் ஏகப்பட்ட பொசஸிஸ் போட்டிகள். ஆனாலும் தீபாவின் எக்கச்சக்க ஆதரவுடன் அடிக்கடி இதில் ஜெயிப்பது ராஜாதான். இதனால் கடுப்பான மாது, தனிக்கட்சி துவக்கியதும், ராஜா மீது போலீஸ் புகார் கொடுத்ததும், இந்த செயல்களுக்காக தீபாம்மாவிடம் ஏக கண்ணியமான வார்த்தைகளில் வாங்கிக் கட்டிக் கொண்டதும் அ.தி.மு.க.வின் வரலாற்றுப் பக்கங்களில் பிளாட்டின எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.
தீபா - ராஜா - மாதவன்! என இந்த முக்கோண பஞ்சாயத்து தாறுமாறாக போய்க் கொண்டிருந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ராஜாவை கட்சியிலிருந்து கட்டம் கட்டினார் தீபா. கேட்டதற்கு ‘யாருக்குமே ராஜாவை பிடிக்கலை. அவர் மேலே குத்தம் சொல்லிட்டே இருக்கிறாங்க. அதனால கனத்த இதயத்தோடு ராஜாவை விலக்கி வைக்கிறேன்.’ என்றார். ராஜாவோ ‘மிகுந்த வருத்தமா இருக்குது. எங்கிருந்தாலும் தீபாவின் பாதுகாப்பில் என் கவனம் இருக்கும்.’ என்றார்.
ராஜா காரை விட்டு இறங்கிய அடுத்த நொடியில் எங்கிருந்தோ வந்த மாதுக்குட்டி, கணவன் எனும் கம்பீரமான பதவியை கையிலெடுத்தபடி மிக உரிமையோடு தீபாவுக்கான காருக்கு டிரைவர் பொசிஸனில் அமர்ந்தார். இனி கட்சியை இயக்கப்போவது இந்த ஆதர்ஸ தம்பதிதான்! என்று பேரவையின் ஆனந்தப்பட்டனர்.
ஊர் கண்ணே படும் வகையில் தீபாவும், மாதவனும் ராஜா-ராணி அலங்காரத்தில் தங்கள் உறவுகளை சந்தித்து அளவளாவியதெல்லாம் அடடடே! ரக நிகழ்வுகள்.
‘இந்த வாழ்க்கைக்குத்தானே நான் இத்தனை காலம் காத்திருந்தே மை பேபி!’ என்று மாதவன் கசிந்துருகி கண்ணீர் விட்டார். அந்த கண்ணீரின் ஈரம் கூட காயத நிலையில் சரக்கென கத்தி செருகிவிட்டார் தீபா, ஆம் ராஜாவை மறுபடியும் கட்சிக்குள் இணைத்திருக்கிறார்.
இது தொடர்பாக தீபா வெளியிட்டிருக்கும் அறிக்கை வாசிக்கும் ஒவ்வொருவனையும் விலா நோக சிரிக்க வைக்கிறது.
“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (ஜெ.தீபா) அணீ மற்றும் எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச்செயலாளர் மாண்புமிகு இளைய புரட்சித்தலைவி ஜெ.தீபா அவர்கள் திரு. ராஜா அவர்களை இன்று முதல் தலைமை நிலைய மாநில செயலாளராக நியமித்துள்ளார்.”
- என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
தீபா இந்த அட்ராசிட்டி அறிவிப்பை வெளியிட்டதோடு, ஜாயினிங் ஆர்டரை தன் நண்பர் ராஜாவை கூப்பிட்டு நேரிலேயே கொடுத்து கவுரவித்திருப்பதுதான் பட்டாசு பாலிடிக்ஸ்.
ராஜாவின் ரீ எண்ட்ரியால் மாதுக்குட்டிதான் மனம் நொந்து கிடக்கிறாராம். ‘நான் வந்துட்டேன்னு சொல்லு’ என்று மாதுவின் காதில் படுமளவுக்கு ராஜா சொல்லியிருப்பது தீபா பேரவையை தாண்டி சட்டப்பேரவை வரைக்கும் அரசியல் பிரளயத்தை கிளப்புமோ?! என்று கெக்கேபிக்கே தனமாக தாவாங்கட்டையை தடவியபடி யோசிக்கிறது அறிவார்ந்த அரசியல் விமர்சக சமூகம்.