பணிக்கு திரும்பாவிட்டால் எஸ்மா பாயும்..? ஆசிரியர்களை அலறவிடும் செங்கோட்டையன்..!
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிடாவிட்டால் எஸ்மா சட்டம் பாயாலாம் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிடாவிட்டால் எஸ்மா சட்டம் பாயாலாம் என அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
9 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து தமிழகம் முழுவதும் ஜாக்டோ ஜியோ அமைப்பைச் சேர்ந்த ஆசிரியர்கள் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுப் வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த கல்வி அமைச்சர் செங்கோட்டையன், ’’தேர்வு நெருங்கும் நேரத்தில் தொடர் வேலைநிறுத்தம் கூடாது. எனவே போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என அரசின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறேன். இன்றுதான் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போகப் போகத்தான் இதை கண்காணித்து முதல்வருடன் கலந்து பேசி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆசிரியர்களுக்கும் துறை சார்பில் தேவையான அறிவுரையும் வழங்கப்பட்டு உள்ளது. போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது டெஸ்மா, எஸ்மா சட்டம் பாயுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த செங்கோட்டையன் இந்த போராட்டம் தொடருமா? தொடராதா? என்பது நாளை தெரிய வரும். அதன் பிறகு இதில் அடுத்த முடிவு என்ன நடப்பது என்பதை அமைச்சர்கள் முடிவு செய்வார்கள். எனவே மனித நேயத்தோடு போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.
டெஸ்மா / எஸ்மா சட்டங்கள் என்ன செய்யும் தெரியுமா?
அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தின் ஆங்கில சுருக்கமே ‘எஸ்மா’. அதாவது, Essential Services Maintenance Act என்பதன் சுருக்கம். இந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயலலிதா அவரது ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டிற்கென தனி சட்டத்தைக் கொண்டு வந்தார். அதுவே, டெஸ்மா (Tamilnadu Essential Services Maintenance Act).
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் காப்பதற்காக மாநில அரசுகளுக்கு கொடுக்கப்பட்ட கூடுதல் அதிகாரமே, எஸ்மா அல்லது டெஸ்மா சட்டத்தின் சிறப்பு அம்சம். தபால், போக்குவரத்து, தொலைபேசி, பாதுகாப்பு, உணவுப்பொருள் கொள்முதல் மற்றும் விநியோகம், பால் விநியோகம் உள்ளிட்டவை அத்தியாவசிய சேவைகளின் கீழ் வருகின்றன. வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதும், அதற்கு ஆதரவு தெரிவிப்பதும் அல்லது கூடுதல் நேரம் பணியாற்ற மறுப்பதும்கூட எஸ்மா / டெஸ்மா சட்டத்தின் கீழ் குற்றமாக கருதப்படும். இந்த சட்டத்தின் கீழ் வாரண்ட் இல்லாமலேயே, கைது செய்யவும் முடியும். இதன்படி ஓராண்டு சிறைதண்டனையோ, அல்லது இரண்டாயிரம் ரூபாய் அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து தண்டையாக விதிக்கப்படும்.