விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்துவிட்டு ஆசிரியர்கள் போராட்டம்... பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்....
பெரம்பலூர்
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்துவிட்டு ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் 10-ஆம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் ஆசிரியர்கள் பலர் ஈடுபட்டு வருகின்ற நிலையில் நேற்று காலை விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்துவிட்டு, பள்ளி வளாகத்தில் உட்கார்ந்து ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் ராஜ்குமார் தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தார்.
இதில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் மகேந்திரன் பங்கேற்று பேசினார். இந்தப் போராட்டத்தில், "புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
7-வது ஊதியக்குழு பரிந்துரைப்படி 21 மாத சம்பள நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.
அனைத்து பிரிவு ஆசிரியர்களுக்கும் உள்ள ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும்.
ஆள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும்.
ஆசிரியர், அலுவலர்கள் பணியிடங்களை குறைக்க நியமிக்கப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும்" உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் பங்கேற்று தங்களத் கோரிக்கைகளுக்கு வலுசேர்த்தனர்.