கரூரில் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம்…
கரூர்
கரூரின் பல்வேறு இடங்களில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் – அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் - அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தப்பட்டது.
அதன்படி கரூர் மாவட்டம் குளித்தலையில் தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதேபோல தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு ஒருங்கிணைப்பாளர் எட்மண்ட் ஆரோக்கியராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
க.பரமத்தியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் செல்வமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகள் தொடர்பான முழக்கங்களை எழுப்பினர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு வட்டார தொடர்பாளர் மோகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தரகம்பட்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருங்கிணைப்பாளர் பிரேம்குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத்தின் பல இடங்களில் ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திய ஆயிரக்கணக்கில் ஆசியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.