அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.93 லட்சம் மோசடி..! கூடுதலாக கொலை மிரட்டல்..?!
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.93 லட்சம் மோசடி..
செய்தி துறையில், ஏ.பி.ஆர்.ஓ., பணி வாங்கி தருவதாக கூறி, ஆறு பேரிடம், 93 லட்சம் ரூபாய் மோசடி செய்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாதிக்கப்பட்டவர்கள், எஸ்.பி.,யிடம் மனு அளித்தனர்.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அடுத்த, பத்தபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசன், 31. இவர், வேலூர் மாவட்ட, எஸ்.பி., பகலவனிடம், நேற்று புகார் அளித்தார்.
அதில்,
ஆம்பூரைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற ஆசிரியர் கமலக்கண்ணன், செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலகத்தில், ஏ.பி.ஆர்.ஓ., வேலை வாங்கித் தருவதாக கூறினார். கடந்தாண்டு, நவம்பர், 5ல், 15.50 லட்சம் ரூபாயை, அவரிடம் கொடுத்தேன்.
கடந்த, ஜனவரி, 5ல், எனக்கு பணி நியமன ஆணை கொடுத்தார். விசாரித்த போது, அந்த ஆணை போலியானது என, தெரியவந்தது. அவரிடம் சென்று, கொடுத்த பணத்தை கேட்ட போது, என்னை மிரட்டி, கொலை மிரட்டல் விடுத்தார். என்னைப்போன்றே, மேலும், 5 பேரிடம், தலா, 15.50 லட்சம் ரூபாய் வாங்கி, போலி நியமன ஆணைகளை அவர் வழங்கி உள்ளார். மோசடியில் ஈடுபட்ட, கமலக்கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். விசாரணைக்கு எஸ்.பி., உத்தரவிட்டார்.
இது குறித்து ஆசிரியர் கமலகண்ணன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.