தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விஜய் பரிசுகள் வழங்கியதையடுத்து, வேல்முருகன் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். 

தவெக தலைவர் விஜய்

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடிகர் விஜய் பரிசுகள் மற்றும் தங்க நாணயங்கள் உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். கடந்த 30ம் தேதி முதல் கட்டமாக 18 மாவட்டங்களை சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.

வேல்முருகன் சர்ச்சை பேச்சு

அப்போது ஒரு சிலர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் சிலர் கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்தினர். இதன் நெகிழ்ச்சியான காட்சிகள் இணையதளத்தில் வைரலானது. இதனை கொச்சைப்படுத்தும் விதமாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இதற்கு தவெக தரப்பில் பெண் குழந்தை மற்றும் அந்த குழந்தையின் தந்தை இடையே இருக்கும் மாசற்ற கனிவையும், அரவணைப்பையும் உணராதவர்களே இது போன்று பேசுவர். 

தற்போது, திமுகவினர் மற்றும் அவர்களை அண்டி பிழைக்கும் வேல்முருகன் போன்றோர் தமிழக பெண்களை அவமதிக்கும் வகையில் பேசி வருகின்றனர். இதற்கு வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக பெண்கள் பதிலடி கொடுக்க வேண்டும். தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏவுக்கு இதுவே இறுதி எச்சரிக்கை என்று தாஹிரா கூறியிருந்தார். இந்த நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வேல்முருகனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக நேற்றைய தினம் சென்னையில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதனால் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் போஸ்டர்

இந்நிலையில் இன்று சேலம் அஸ்தம்பட்டி ஐந்து ரோடு பழைய பேருந்து நிலையம் ஆட்சியர் அலுவலக சாலை உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடிகர் விஜயை கண்டித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் எச்சரிக்கை போஸ்டர்கள் ஓட்டப்பட்டுள்ளது.

அடக்கி வாசியுங்கள் இல்லையெனில் அடக்கப்படுவீர்கள்

அந்த போஸ்டரில் எச்சரிக்கை எச்சரிக்கை நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களே அடக்கி வாசியுங்கள் இல்லையெனில் அடக்கப்படுவீர்கள். தமிழக வெற்றிக்கழக ரசிகர் குஞ்சுகளுக்கு எச்சரிக்கை என எழுதப்பட்டுள்ளது. தொடர்ந்து நடிகர் விஜயின் புகைப்படத்தை அளித்தும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை மாணவர் அணி பொறுப்பாளர் கரும்புலி கவியரசன் என்பவர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.