ஒரு புறம் திறப்பு..ஒரு புறம் அடைப்பு.. இன்றைக்கு ஊரடங்கு இல்லையா..?வித்தியாசமாக நிகழ்ந்தேறிய சம்பவம்..
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி - தமிழக எல்லைகளில் ஒரு பகுதியில் கடைகள் அடைத்தும் மறுபுறம் கடைகள் திறந்தும் காணப்படும் வித்தியாசமான சம்பவம் நடந்தேறியுள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி - தமிழக எல்லைகளில் ஒரு பகுதியில் கடைகள் அடைத்தும் மறுபுறம் கடைகள் திறந்தும் காணப்படும் வித்தியாசமான சம்பவம் நடந்தேறியுள்ளது. தமிழகத்தில் 3வது வாரமாக ஞாயிறுகிழமையான இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனால் புதுச்சேரியில் முழு ஊரடங்கு இல்லை. இதனால் புதுச்சேரி-தமிழக எல்லைகளில் போலீசார் வாகன சோதனையில் இரு மாநில போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி - கடலூர் எல்லையான முள்ளோடை, புதுச்சேரி - விழுப்புரம் எல்லையான மதகடிப்பட்டு, புதுச்சேரி - மரக்காணம் எல்லையான கோட்டக்குப்பம், புதுச்சேரி - திண்டிவனம் எல்லையான கோரிமேடு ஆகியவற்றில் இரு மாநில போலீசாரும் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனையில் ஈடுப்பட்டனர்.
மேலும் இதில் தமிழக பகுதிகளுக்கு எந்த வாகனத்தையும் தமிழக போலீசார் அனுமதிக்கவில்லை. இதேபோல புதுச்சேரியில் எந்த தடையும் இல்லாத காரணத்தால் வெளி மாநில மக்களும் சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இந்நேரத்தில் புதுச்சேரிக்குள் பல தமிழக பகுதிகள் உள்ளன. தமிழகத்தில் முழு ஊரடங்கு இருந்தாலும் புதுச்சேரியில் எந்த கட்டுப்பாடும் இல்லை. இதனால் தமிழக-புதுச்சேரி எல்லைகளில் வித்தியாசமான காட்சிகள் காணப்படுகின்றன. இரு எல்லைகளிலும் ஒருபுறம் சகஜமான வாழ்க்கையில் மக்கள் இருப்பதும் மறுபுறம் இயல்பு வாழ்வில் பாதிப்பும் காணப்படுகிறது. தமிழகத்தில் முழு ஊரடங்கு காரணமாக புதுச்சேரி - தமிழக எல்லைகளில் ஒரு பகுதியில் கடைகள் அடைத்து மறுபுறம் கடைகள் திறந்தும் காணப்படுகிறது.
குறிப்பாக தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தில் வாகன போக்குவரத்தை தடுக்க தடுப்புகளை போலீசார் அமைத்துள்ளனர். ஆனால் அப்பகுதி மக்கள் நடந்த சென்று புதுச்சேரி பகுதியில் மீன், இறைச்சி, காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மதுவை வாங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கும் புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கும் சென்ற வியாபாரம் செய்பவர்களும் வேலை செய்பவர்களும் முழு ஊரடங்கால் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இதனால் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்க மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.