வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழகத்தின் தென் மாவட்டங்களின் கடற்கரையை ஒட்டி, 3.6 கி.மீ., உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய இலங்கை பகுதியில், 1 கி.மீ., உயரம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதனால் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. பிற மாவட்டங்களில் பெரும்பாலும், வறண்ட வானிலையே நிலவும். தலைநகர் சென்னையில் வானம் மேகமூட்டமாகக் காணப்படும். தவிர ஒரு சில இடங்களில், லேசான மழை பெய்யலாம்.

தமிழகத்தில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில், மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.சென்ற 24 மணி நேரத்தில், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் அதிகபட்சமாக,22; திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில், 21 செ.மீ., மழைப் பதிவாகி உள்ளது’ எனக் கூறப்பட்டுள்ளது.