நாட்டு மாடுகளை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு… தமிழக அரசின் அவசரச் சட்டத்தில் தகவல்…….
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததை அடுத்து அதை நீக்கக் கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் அறவழிப் போராட்டத்தில் மிரண்டு போன மத்திய,மாநில அரசுகள் உடனடியாக தடையை நீக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டன.
இதனையடுத்து ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்குவதற்காக தமிழக சட்டசபையில் புதிய சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்துக்கு முறைப்படி ஒப்புதல் பெற மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை ஆய்வு செய்த உள்துறை அமைச்சகம், சட்டத்துறை, சுற்றுச்சூழல் துறை, கலாச்சாரதுறை ஆகிய மூன்று துறைகளுக்கும் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை அனுப்பி வைத்தது.. அந்த மூன்று அமைச்சகங்களும் உடனடியாக இதற்கு ஒப்புதல் வழங்கின.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் அவசரச் சட்டத்தில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்குவது தொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்ட மாநில திருத்த சட்ட அறிவிக்கை தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதன் மூலம் ஜல்லிக்கட்டு ஒரு சட்ட விரோத செயலாகாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜல்லிக்கட்டு தவிர, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடு விழா போன்றவற்றுக்கான தடையும் நீக்கப்பட்டுள்ளதாக அரசிதழில் கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு என்பது பாரம்பரிய நாட்டு மாடுகளை பாதுகாக்கும் வகையில் நடத்தப்படுகிறது என்றும் தமிழக அரசின் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
