- Home
- Tamil Nadu News
- Milk Price : லிட்டருக்கு 4 ரூபாய் உயரும் பால் விலை! பால் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு!
Milk Price : லிட்டருக்கு 4 ரூபாய் உயரும் பால் விலை! பால் தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பு!
Milk Price : தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்தி அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு ஜூலை 9-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்த ஆண்டில் தனியார் நிறுவனங்கள் மேற்கொள்ளும் இரண்டாவது விலை உயர்வு இது.

விலை உயர்வு விவரம்
முன்னணி தனியார் பால் நிறுவனமான ஆரோக்கியா நிறுவனம், தனது முகவர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 9 முதல் புதிய விலை அமலுக்கு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன்படி:
- டோண்டு பால் (Toned Milk): 500 மி.லி - ரூ.29-லிருந்து ரூ.31 ஆக உயர்வு. (1 லிட்டர் - ரூ.54-லிருந்து ரூ.57).
- நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardised Milk): 500 மி.லி - ரூ.35-லிருந்து ரூ.37 ஆக உயர்வு. (1 லிட்டர் - ரூ.66-லிருந்து ரூ.69).
- ஃபுல் கிரீம் பால் (Full Cream Milk): 500 மி.லி - ரூ.39-லிருந்து ரூ.41 ஆக உயர்வு. (1 லிட்டர் - ரூ.73-லிருந்து ரூ.76).
- தயிர்: ஹட்சன் தயிர் 500 கிராம் ரூ.44 ஆகவும், ஆரோக்கியா தயிர் 500 கிராம் ரூ.42 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேவேளையில், பால் முகவர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்களுக்கான கமிஷன் தொகையையும் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
விலை உயர்வுக்கு என்ன காரணம்?
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்துச் செலவுகள் அதிகரித்துள்ளதும், பால் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருப்பதும் இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. முன்னதாக, பிப்ரவரி மாதமே தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு ரூ.2 வரை விலையை உயர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பால் தட்டுப்பாடு அபாயம்
இந்த விலை உயர்வை தமிழ்நாடு பால் முகவர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கம் கடுமையாகக் கண்டித்துள்ளது. இது தொடர்பாக அந்தச் சங்கம் கூறுகையில், "கோடை மழை பொய்த்ததால் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களிலும் பால் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தையில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது" என்று எச்சரித்துள்ளது.
பால் கொள்முதலுக்கான போட்டியில் தனியார் நிறுவனங்கள் அதிக விலையும், கூடுதல் சலுகைகளையும் வழங்குவதால், ஆவின் பால் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு வந்த பால் விநியோகம் குறைந்துள்ளதாகச் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். ஆவினின் தினசரி பால் கொள்முதல் அளவு சுமார் 25 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகவும், அது இன்னும் மீளவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அரசின் நடவடிக்கை தேவை
தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்கவும், விநியோகத்தைச் சீராக்கவும், பால் கறக்கும் பசுக்களை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் புதிய திட்டத்தை அரசு உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு குறித்த செய்திகள் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசுத் தரப்பிலிருந்து என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

