மக்களே உஷார்... அடுத்த 2 நாட்களுக்கு வெளுத்து வாங்க போகும் கன மழை...!
அக்டோபர் 8 ஆம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 8 ஆம் தேதியில் இருந்து வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, புயலாக வலுப்பெற்று வடமேற்கு திசையில் ஓமன் கரையை நோக்கி நகரக் கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி வரை, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இது அடுத்து வரும் 2 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற்று மேற்கு திசையில் ஓமன் கரையைக் நோக்கி நகரக்கூடும். தெற்கு வங்கக்கடல் பகுதியில் 8 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும். தென்மேற்கு பருவமழை வட இந்திய பருவமழைகளில் இருந்து, அடுத்து வரும் மூன்று தினங்களில் படிப்படியாக விலகி வரும் 8 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழக, கேரளா, தெற்கு கர்நாடக பகுதிகயில் துவங்க சாதகமாக உள்ளது.
குமரிக்கடல், லட்சதீவுகள், தென்கிழக்கு மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் மீனவர்கள் செல்ல வேண்டாம். சென்னையில் அடுத்த இரண்டு தினங்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் எண்ணூரில் 13 செ.மீ., செங்கல்பட்டு 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை மைய இயக்குநர் கூறினார்.