மயான பணியாளர்களை அங்கீகரித்த தமிழக அரசு… முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசாணை!!
கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயான பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. காவல் துறை பணியாளர்கள், முப்படை வீரர்கள், ஊர்க்காவல் படை பணியாளர்கள், சிறைச்சாலை பணியாளர்கள், பேரிடர் மேலாண்மையில் ஈடுபடும் தன்னார்வலர்கள், கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் பணியாற்றும் நகராட்சி அல்லது வருவாய்த்துறை ஊழியர்கள் ஆகியோர் ஏற்கனவே முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். முன்களப் பணியாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. முன்களப் பணியாளர்கள் கொரோனா தொற்றால் இறக்க நேரிட்டால் அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படுகிறது. இதுபோல் மேலும் பல சலுகைகள் முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், முக்கிய தொழிற்சாலைகள், பள்ளி ஆசிரியர்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்த வகையில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணியாற்றி வரும் மயானப் பணியாளர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையிலும், சிறப்பு சலுகைகள் கிடைக்கும் வகையிலும், முன்களப் பணியாளர்களாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், உணவகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் கட்டிட தொழிலாளர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் அனைத்து மார்க்கெட் தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்து கழக ஊழியர்கள், அனைத்து அரசு ஊழியர்கள் ,அனைத்து பள்ளி ,கல்லூரி ஆசிரியர்கள், அனைத்து ஆட்டோ டாக்ஸி ஓட்டுனர்கள், ஊடகத் துறை பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி இலவசமாக வழங்க ஆணையிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஊரக வளர்ச்சி,உள்ளாட்சி, பேரூராட்சி ,நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி பணிபுரிந்து வரும் ,மயான பணியாளர்களின் உன்னதமான பணியை அங்கீகரிக்கும் வகையிலும், அவர்களுக்கு உரிய அங்கீகாரம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் வகையிலும் அவர்களை முன் களப்பணியாளர்கள் அறிவிப்பதாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் மயானங்களில் தகனம் செய்ய உடல்கள் அதிகமாக வருகிறது. பல்வேறு மயானங்களில் உடல்கள் நீண்ட வரிசையில் வைக்கப்பட்டிருந்தன.
இதை அடுத்து மயான பணியாளர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வந்தனர். மத்திய அரசின் ஆணைப்படி மயானப் பணியாளர்கள் மத்திய அரசின் முன் களப்பணியாளர்கள் பட்டியலில் இல்லாவிடினும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும்போது தமிழ்நாடு அரசு மயான பணியாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படும் என்று கூறியுள்ளது. கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் கொரோனா காலத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தி, பணிபுரிந்து வரும் மயானப் பணியாளர்கள் இறக்கும் நேர்வுகளில் அவர்களின் குடும்பங்களுக்கு சம்பந்தப்பட்ட துறை வாரியாக ரூபாய் 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.