டெல்லியில் அடிக்கடி உயிரிழக்கும் தமிழக மாணவர்கள்… .ஈரோடு மாணவி ஸ்ரீமதி தூக்கிட்டு தற்கொலை !!
டெல்லிக்கு ஐஏஎஸ் படிக்கச் சென்ற ஈரோட்டைச் சேர்ந்த மாணவி ஒருவர் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஆலாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி தங்கராஜ் என்பவரின் மகள் ஸ்ரீமதி கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ. படித்து முடித்துவிட்டு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்துக்கு படிக்க சென்றார்.
பயிற்சி மையத்தின் அருகே உள்ள ஒரு அறையை வாடகைக்கு எடுத்து ஸ்ரீமதி தங்கியிருந்தார். ஸ்ரீமதியுடன் திருநெல்வேலியை சேர்ந்த மாணவி ஒருவரும் தங்கி ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். இந்தநிலையில் நேற்று திருநேல்வேலி மாணவி வெளியில் சென்றுவிட்டு தான் தங்கியிருந்த அறைக்கு வந்தார். அப்போது ஸ்ரீமதி அறையின் விட்டத்தில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார்.
இதுகுறித்து டெல்லி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஸ்ரீமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பிறகு ஸ்ரீமதியின் உடல் சத்தியமங்கலத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.
ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவ-மாணவிகள் டெல்லிக்கு படிக்கச் சென்று தற்கொலை செய்து கொள்வது குறிப்பிடத்தக்கது.