தமிழக அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகளில் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயமாக்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்வதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டது. அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் கட்டாயம். தற்போது நடைமுறையிலுள்ள பொதுத்தமிழ், பொது ஆங்கிலம் உள்ள தேர்வுகளில், பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டு, பொது தமிழ் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும்.

தமிழ் மொழித் தகுதித் தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம் வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. கட்டாய தமிழ்மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி கட்டாயமாக்கப்படுகிறது. தேர்ச்சி பெறாதவர்களின் இதர தேர்வுத்தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது’ என்று கூறப்பட்டு இருந்தது. மேலும், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குரூப் 2, குரூப் 2 ஏ ஆகிய இரண்டு பிரிவு பணியிடங்களுக்கு இனி ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்படும். இந்த இரு பிரிவுகளுக்கும் முதனிலை மற்றும் முதன்மை எழுத்துத் தேர்வுகளை கொண்டதாக மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனியாக தேர்வுகள் நடத்தப்படுவதால் தேவையற்ற காலவிரயமும் வரிப்பணமும் வீணாகிறது. இதை கருத்தில் கொண்டு இரண்டுக்கும் சேர்த்து ஒரே தேர்வாக நடத்த நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டிஎன்பிஎஸ்சி நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழ்மொழி தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்றால் மட்டுமே இதர வினாத்தாள்களை மதிப்பீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 4 தேர்வில் மட்டும் தமிழ்மொழி தகுதி தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் தரவரிசை பட்டியல் கணக்கிட பயன்படுத்திக் கொள்ளப்படும். குரூப்-1 குரூப்-2 மற்றும் 2A போன்ற தேர்வுகளில் தமிழ்மொழி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும். அதுமட்டுமில்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து குரூப்-4 மட்டும் முறை நிலைகொண்ட தேர்வில் தமிழ் மொழி தகுதி தேர்வானது கொள்குறி வகையில் கேட்கப்படும்.

இதையடுத்து இரண்டு நிலைகளைக் கொண்ட குரூப்-1 ,குரூப்-2, 2ஏ தேர்வு எழுத தகுதி தேர்வை விரிவாக விடை அளிக்க கூடிய வகையில் கேட்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத் திட்டங்கள் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் ஆகியவற்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற இணையதளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த இணையதளத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகளுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குறித்த அறிவிப்பு முதல் அரசாணையை உடனடியாக வெளியிட்டது வரை முதல்வர் ஸ்டாலின் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் செயல்படுவது அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுவருகிறது.
