2022 முதல் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 

2022 முதல் 2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2022-23 ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வருகின்ற மார்ச் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கும். நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கல் செய்வார். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை மண்டபத்தில் கூட்டத்தொடர் இந்த பட்ஜெட் தாக்கல் நடைபெறும்.

2022 - 2023 மானிய கோரிக்கை மார்ச் 24 ஆம் தேதி தொடங்கும். கொரோனா விதிகளை பின்பற்றி பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும். கேள்வி நேரம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். தொழில்நுட்ப பிரச்சனைகள் தீர்க்கப்பட்ட பிறகு சட்டப்பேரவையின் முழு நிகழ்ச்சியும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும். கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி மார்ச் 18 ஆம் தேதி அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு எடுக்கப்படும்.

கூட்டத்தொடரில் பங்கேற்பவர்களுக்கு,தேவைக்கேற்ப RT-PCR பரிசோதனை நடைபெறும். 2022-23 ஆம் ஆண்டுக்கான மானிய கோரிக்கை மற்றும் இறுதி துணை நிலை அறிக்கை வரும் 24 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முக்கியமான, குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.