நீட் முதுநிலை பூஜ்ஜியம் பெர்சைன்டைல் குறித்து தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார்

நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் மருத்துவ மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், எம்டிஎஸ் போன்ற முதுநிலை படிப்புகளுக்கான இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களைக் கொண்டு நிரப்பப்பட்டு வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தகுதி மதிப்பெண்கள் பூஜ்ஜியம் பெர்சைன்டைல் ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும் அல்லது அதற்கு குறைவாக நெகட்டிவ் மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரடு அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் 8 ஆயிரத்துக்கும் கூடுதலான முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் நிரப்பப்படாமல் போகும் என்றும், அந்த இடங்களை நிரப்ப தகுதியான மாணவர்கள் இல்லை என்பதால் தான் தகுதி மதிப்பெண்கள் குறைக்கப்பட்டதாக மத்திய அரசின் தரப்பிலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் தரப்பிலும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது மருத்துவ படிப்பின் தரத்தை குறைக்கும் எனவும், தனியார் மருத்துவ கல்லூரிகளின் லாபத்துக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது எனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், மருத்துவக் கல்வியின் தரத்தை அதிகரிக்கவும், மருத்துவக் கல்வி வணிகமயமாவதை தடுக்கவும் நீட் தேர்வு எந்த வகையிலும் உதவவில்லை என்பதால், மருத்துவப் படிப்புக்கான அனைத்து நிலைகளிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நீட் முதுநிலை பூஜ்ஜியம் பெர்சைன்டைல் குறித்து தெலங்கானா ஆளுநரும், மருத்துவருமான தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “மருத்துவ முதுநிலை படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வில் "பூஜ்ஜியம்" மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் அவர்களுக்கு கல்லூரியில் சேர இடம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளதை போல தவறாக விமர்சிப்பவர்களுக்கு நீட் தேர்வு கட் ஆப் மதிப்பெண், பூஜ்ஜியம் பர்சன்டைல் என்றால் என்ன? என்பதை பற்றிய புரிதல் முதலில் அவசியம்.

Scroll to load tweet…

நீட் தேர்வை பற்றிய புரிதல் இன்றி நீட் தேர்வை ஒழிப்பதாக கூறிக் கொண்டிருப்பவர்களுக்கு இதைப் பற்றிய புரிதல் இல்லாதது ஒன்றும் ஆச்சரியமல்ல? நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மருத்துவம் மேற்படிப்பு படிக்க இடம் கிடைக்காது என்பது நிதர்சனமான உண்மை.

நீட் தேர்வில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண் எடுத்தால் மட்டுமே மருத்துவ மேற்படிப்பில் சேரலாம். இந்தியாவில் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்கள் அனைவருக்குமே மருத்துவ மேற்படிப்பு படிக்க இடம் கிடைப்பதில்லை. மருத்துவ மேற்படிப்பில் நீட் தேர்வில் உச்ச பட்ச மதிப்பெண்கள் பெற்றவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க முன்னுரிமை.

அத்தகைய இடங்கள் முழுமையான நிரம்பிய பின்னர் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியாத மாணவர்கள் பயன்பெறும் வகையில் குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்திக் கொள்ளும் இந்த முறையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.

கைம்பெண்களுக்கு மாதம் ரூ.2000 நிதியுதவி: அரசின் சூப்பர் திட்டம் - எப்படி விண்ணப்பிப்பது?

இதன் புரிதல் மிக அவசியம். நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்தவர்களுக்கு நிச்சயம் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காது. குறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கே இந்த முறை. இதை விமர்சிப்பவர்கள் இதைப் பற்றிய புரிதல் மிக அவசியம்.

இதைப்பற்றி புரிதல் இல்லாமல் மக்களையும், மாணவர்களையும் குழப்பி மாணவச் செல்வங்களிடம் தவறான எண்ணங்களை கொண்டு சேர்க்கின்றனர்.இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டுள்ளார்.