மூத்த தமிழறிஞரும், பன்னாட்டு தமிழ் நடுவம் அமைத்தவருமான அரு கோபாலன் (அருகோ) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைவு, தமிழ்ச் சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

தமிழ்த் தேசிய சிந்தனைகளால் அடையாளம் காணப்பட்ட மூத்த தமிழறிஞரும், பன்னாட்டு தமிழ் நடுவம் அமைத்தவருமான அரு கோபாலன் (அருகோ) இன்று உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரின் மறைவு, தமிழ்த் தேசியவாதிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழுக்காகவும், உரிமைகளுக்காகவும் வாழ்நாள் முழுவதும் தமிழர்களுக்காகப் பணியாற்றிய ஒரு குரல் இன்று மௌனமானது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழ்நாட்டின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட அருகோ, ‘எழுகதிர்’ எனும் தமிழ்த் தேசிய மாத இதழின் ஆசிரியராக நீண்ட காலம் செயல்பட்டார். தமிழ்த் தேசிய அரசியலுக்கு வலுவான தத்துவ அடித்தளத்தை வழங்கிய அவர், திராவிட இயக்கத்தின் சில கோட்பாடுகளை விமர்சித்து தனித்த அரசியல் பார்வையை முன்வைத்தார். தமிழர் நலனே தனது வாழ்வின் மையமாக இருந்தது.

‘அருகோ’ என்ற பெயரை தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் சூட்டியதாக அறியப்படுகிறது. நெல்லை மாவட்டம் சங்கரன்கோயிலில் பிறந்த அவர், எளிய குடும்பப் பின்னணியில் இருந்து எழுந்து தமிழ்த் தேசிய இயக்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்தார். ஆதித்தனாருடன் இணைந்து ‘தமிழ்க்கொடி’ இதழில் பணியாற்றிய அனுபவமும் அவருக்கு இருந்தது.

அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருகோவின் மறைவு தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஏற்பட்ட பேரிழப்பு என குறிப்பிட்டார். இறுதிக் காலத்திலும் தமிழின விடுதலை குறித்து அவரது ஆழ்ந்த கவலை தன்னை நெகிழ வைத்ததாகவும் அவர் கூறினார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், அருகோ தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் இறுதி மூச்சு வரை போராடியவர் என புகழாரம் சூட்டினார். ஈழத் தமிழர் விடுதலை இயக்கங்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அவர், அதற்காக பல போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்ற வரலாறு உண்டு.

தமிழறிஞர் அருகோவின் மறைவு, தமிழ்த் தேசிய சிந்தனை உலகில் நிரப்ப முடியாத வெற்றியை உருவாக்கியுள்ளது. அவரது எழுத்துகளும், பேச்சுகளும், போராட்டங்களும் எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கத் தொடரும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.