TNGIM2024 முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வணிகத்திற்கு உகந்த மாநிலம் தமிழ்நாடு: முகேஷ் அம்பானி புகழாரம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வணிகத்திற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார்
![Tamil Nadu is a business friendly state under the leadership of MK lauds Mukesh Ambani smp Tamil Nadu is a business friendly state under the leadership of MK lauds Mukesh Ambani smp](https://static-ai.asianetnews.com/images/01hkhfyq1s0c2bv56h7pv2thka/mukesh-ambani_363x203xt.jpg)
2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் கொண்ட பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற உயரிய கொள்கையை நோக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதன் ஒருபகுதியாக, உலக அளவில் மிகப் பெரிய நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஈர்க்கும் வகையில், தமிழகத்தில் இன்றும், நாளையும் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறுகிறது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் 50 நாடுகளைச் சோ்ந்த தொழில் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டின் மூலம், தமிழகத்துக்காக ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈா்க்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வணிகத்திற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதாக ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி புகழாரம் சூட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் கலந்து கொள்ளவில்லை.
இருப்பினும், காணொலி மூலம் உரையாற்றிய முகேஷ் அம்பானி, “தவிர்க்க முடியாத காரணங்களால் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் என்னால் பங்கேற்க முடியவில்லை. இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, நாட்டிலேயே தொழில் நிறுவனங்களுக்கு இணக்கமான மாநிலங்களில் முன்னிலையில் உள்ளது.” என புகழாரம் சூட்டினார்.
பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை தள்ளி வைப்பு!
தொடர்ந்து பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாட்டிலேயே வணிகத்திற்கு உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. எனவே, அது விரைவில் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ரிலையன்ஸ் பல ஆண்டுகளாக தமிழகத்தின் வளர்ச்சியில் பெருமிதத்துடன் பங்கு பெற்றுள்ளது. ரூ.25,000 கோடிக்கு மேல் முதலீடு செய்து மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 1,300 சில்லறை விற்பனைக் கடைகளைத் திறந்துள்ளோம். தமிழ்நாட்டில் ரூ.35,000 கோடிக்கு மேல் ஜியோ முதலீடு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் ஒவ்வொரு நகரம், கிராமத்தில் 35 மில்லியன் சந்தாதாரர்களிடம் டிஜிட்டல் புரட்சியின் மூலம் அதன் பலன்களை ஜியோ கொண்டு சேர்த்துள்ளது.” என்றார்.
“கனடாவின் புரூக்ஃபீல்ட் அசெட் மேனேஜ்மென்ட் மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட டிஜிட்டல் ரியாலிட்டியுடன் இணைந்து ரிலையன்ஸ் ஒரு அதிநவீன தரவு மையத்தை அமைக்க உள்ளது. அது அடுத்த வாரம் திறக்கப்படும். தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பசுமை ஹைட்ரஜனில் புதிய முதலீடுகளை மேற்கொள்ள ரிலையன்ஸ் உறுதி பூண்டுள்ளது. காலநிலை நெருக்கடியில் இருந்து தாய் பூமியை காப்பாற்ற தேவையான நிலையான வளர்ச்சியை மேம்படுத்த மாநில அரசுடன் நெருக்கமாக பணியாற்றுவோம்.” எனவும் அவர் கூறினார்.