வெயில் காலத்தில் தண்ணீர் நிறைய குடியுங்கள் ஆனால் உடலில் பாதிப்பை ஏற்படுத்தும் தண்ணீ அடிப்பதை குறைத்துக் கொள்ளுமாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை மாநகராட்சி சார்பில் கோடைகால வெப்பம், வெப்ப அலை பாதிப்பு தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சியை இன்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'கத்திரி வெயில் தொடங்கியுள்ளதால் மக்கள் அவசியம் இல்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும் பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையில்லாமல் மற்றும் முடிந்தளவு வெளியில் செல்ல கூடாது.
எப்பொழுதும் கையில் தண்ணீர் பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள். தாகம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் போதிய அளவு தண்ணீரை குடிக்க வேண்டும். ஆனால் உடலில் பாதிப்பை ஏற்படுத்து தண்ணீ அடிப்பதை ( மது அருந்துவதை) குறைந்துக் கொள்ளுங்கள். வேலூர், மதுரை, கரூர், சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் நிலவுகிறது. இன்னும் பல மாவட்டங்களில் ஒரு சில நாட்களில் வெப்பநிலை சதம் அடிக்க வாய்ப்புள்ளது.
ஆம்லேட் போடும் அளவுக்கு வெயில் உள்ளதால் வாகனங்களின் சீட்டில் துண்டை போட்டு வையுங்கள். பாட்டில்களில் அடைத்து விற்கப்படும் குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும். தண்ணீர் காய்கறிகள், பழங்கள், எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகளை பருகுங்கள். வெயிலுக்கு ஏற்ற வகையில் காட்டன் உடைகளை அணியுங்கள். முழு உடலையும் மூடும் வகையில் ஆடைகளை அணிவதன் மூலம் வெப்பத்தில் இருந்து காத்துக் கொள்ளுங்கள்.
காலனி இல்லாமல் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். வீடுகளின் முன் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களின் மீது குழந்தைகளை அமர வைக்க வேண்டாம். வெயில் பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகள், படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. கொரோனா குறித்தான பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதலிளத்த அமைச்சர், “ தமிழகத்தில் இதுவரை எக்ஸ்இ கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்றும் இதுவரை 27 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கூறினார். சென்னையில் வருகிற 8ம் தேதி 3,000 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது என்றார்.
