சிலந்தி ஆற்றை தொடர்ந்து முல்லை பெரியாரை டார்கெட் செய்யும் கேரளா.. புதிய அணை கட்டினால் பாதிப்பு என்ன.?
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டி வரும் நிலையில், மற்றொரு பக்கம் முல்லை பெரியார் அணை பாதுகாப்பாக இல்லையென கூறி புதிய அணையை கட்ட சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மத்திய அரசு பரசீலனைக்கு எடுத்துள்ளது.
![Tamil Nadu has protested against the Kerala government's construction of dams on the Mullai Periyar and silanthi rivers KAK Tamil Nadu has protested against the Kerala government's construction of dams on the Mullai Periyar and silanthi rivers KAK](https://static-ai.asianetnews.com/images/01fmbzb1jm73w8hbckmh96ef2d/dfgd_363x203xt.jpg)
சிலந்தி ஆற்றில் தடுப்பணை
நதி நீர் பிரச்சனை அண்டை மாநிலங்களுக்கு இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. ஒருமுறை கர்நாடக அரசோடு காவிரி நதி நீரில் பிரச்சனை ஏற்பட்டால் மற்றொரு முறை கேரள அரசோடு முல்லைபெரியாறு அணை விவகாரத்தில் மோதல் ஏற்படுகிறது. இந்தநிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தேவிக்குளம் வட்டத்திற்கு உட்பட்ட பெருகுடா என்ற இடத்தில் தான் சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. உள்ளூர் மக்களின் குடிநீர் தேவைக்காகவே தடுப்பணை கட்டப்படுவதாக கேரள அரசின் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டால், அதன்பின் அந்த ஆற்றிலிருந்து அமராவதி ஆற்றுக்கு தண்ணீர் வருவது முற்றிலும் நின்று விடும்.
அமராவதி வறண்டு போகும்
இதனால் திருப்பூர், கரூர் மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன ஆதாரமாக திகழும் அமராவதி ஆற்றை அழிக்கும் நோக்குடன் கேரளம் மேற்கொண்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது. பழனி மலைத் தொடருக்கும், ஆனைமலைத் தொடருக்கும் இடைப்பட்ட மஞ்சம்பட்டி பள்ளத்தாக்கில் உருவாகும் அமராவதி ஆறு திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பாய்ந்து, 55,000 ஏக்கர் நிலங்களுக்கு பாசன ஆதாரமாக திகழ்கிறது. இந்தநிலையில் புதிய தடுப்பணை கட்டினால் தமிழகத்தில் விவசாயம் மட்டுமில்லாம் மக்களும் குடிநீர் இன்றி பாதிக்கப்படும் நிலை உருவாகும்.
இது ஒரு பக்கம் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், முல்லை பெரியாறுக்கு பதிலாக புதிய அணை கட்ட கேரள அரசு மீண்டும் முயற்சி மேற்கொண்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலுவாக உள்ளது என்றும், முதல் கட்டமாக 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம் எனவும், சிற்றணையில் சிறு சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்த பிறகு முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் இந்த உத்தரவை கேரள அரசு நிறைவேற்றாமல் 142 அடிக்கு கீழாகவே தண்ணீரை தேக்கி வருகிறது.
முல்லை பெரியாரில் புதிய அணை
இந்த சூழ்நிலையில் தான் முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக இல்லையென கூறி, மாற்றாக புதிய அணை கேரள மாநிலம், பீர்மேடு தாலுகா, பெரியார் கிராமத்தில் அமைகிறது. இந்த இடம் வண்டிப்பெரியாரிலிருந்து 8 கி.மீ தூரத்தில் உள்ளது. தற்போது இருக்கும் அணையிலிருந்து 1200அடி கீழ்திசையில் புதிய அணையைக் கட்ட கேரள அரசு திட்டமிட்டுள்ளது. முல்லை பெரியார் அணைக்குக் கீழே புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை செய்வதற்கான ஆய்வு எல்லைகள் கோரி 05.02.2024 இல் கேரள அரசின் நீர்வளத்துறை ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவிடம் விண்ணப்பித்திருந்தது.
இந்த விண்ணப்பத்தை வரும் மே 28 தேதி பரிசீலனைக்காக ஒன்றிய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு பட்டியலிட்டுள்ளது. எனவே கேரள அரசு புதிய அணை கட்டினால் தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள முல்லை பெரியார் கையை விட்டு செல்லும் நிலை உருவாகும் இதனால் தென் மாவட்டத்தில் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.