பத்திரப்பதிவு சேவை கட்டணம் உயர்வு.. ஜுலை 10 முதல் என்னென்ன மாற்றங்கள்? முழு விபரம்
பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.

பத்திரப்பதிவுத் துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜுலை 10 ஆம் தேதி முதல் (திங்கள் கிழமை) அனைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு நடைமுறை அமலுக்கு வருவதாகவும் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பதிவுத்துறையில் அளிக்கப்படும் சேவைகளுக்கான கட்டணங்கள் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக மாற்றம் செய்யப்படவில்லை. எனவே, பதிவுத்துறையால் வழங்கப்பட்டு வருகின்ற ஆவண பதிவு, பதிவு செய்யப்படும் ஆவணத்தினை பாதுகாத்தல், மின்னணு சாதனத்தில் இருந்து ஆவண நகல்கள் வழங்குதல் போன்ற சேவைகளைப் பொருத்து கட்டண வீதங்களை மாற்றியமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சேவை கட்டணத்தை உயர்த்தும் முடிவின் அடிப்படையில் பதிவுச்சட்டம், 1908-இன் பிரிவு 78-இல் கட்டண விவர அட்டவணையிலுள்ள 20 இனங்களுக்கான கட்டண வீதங்களும் சில ஆவணப் பதிவுகளுக்கான பதிவு மற்றும் முத்திரை கட்டண வீதங்களும் திருத்தியமைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் 20 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகும் எனவும், குடும்ப நபர்களுக்கு இடையேயான செட்டில்மெண்ட், பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கு அதிகபட்ச பதிவு கட்டணம் 4 ஆயிரம் ரூபாயில் இருந்து 10 ஆயிரம் ரூபாயாகும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெறும் ரூ.133 போடுங்க.. உங்களுக்கு 3 லட்சம் கிடைக்கும் - அதிக லாபம் தரும் போஸ்ட் ஆபிஸ் திட்டம்
ஆதார் - பான் கார்டு இணைக்கவில்லையா.? இனி இந்த 15 விஷயங்களை செய்ய முடியாது - முழு விபரம்