காவலர்கள் - பொதுமக்கள் இடையே நல்லுணர்வு மேன்படுத்த புதிய திட்டம்.. 10 கோடியில் தயாராகும் புதிய வசதிகள்!
காவலர்கள் மற்றும் பொதுமக்கள் இடையிலான ஒரு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்களில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்பான சில வசதிகளை ஏற்பாடு செய்திட தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தற்பொழுது உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையினர், பொதுமக்களை நண்பர்களாக கருதி அவர்களிடம் கண்ணியத்துடனும், கருணையுடனும் நடந்து கொள்வதை உறுதி செய்ய தமிழ்நாடு அரசு பல சிறந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. காவலர்கள் மற்றும் மக்களிடையே நல்லுறவை மேம்படுத்த, காவல் பணியாளர்களுக்கு, அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி உதவியுடன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக காவல் நிலையங்களை அணுகும் பொதுமக்களின் வசதிக்காக முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள 250 காவல் நிலையங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் செலவில் வரவேற்பறை, பார்வையாளர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதி மற்றும் காத்திருப்பு கொட்டகைகள் ஆகியவற்றை மொத்தம் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் அவர்களால் 2023 2024ம் ஆண்டுக்கான காவல்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையிலும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் பொருட்டு 250 காவல் நிலையங்களில் மேற்குறிய வசதிகளை செய்ய ஆவணம் செய்யப்பட்டு வருகின்றது.
இதன் மூலம் காவல் நிலையங்கள் நவீன மயமாக்கப்படுவதோடு, அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் அணுகக் கூடிய வகையிலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும் விதமாகவும் பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தும் இடமாக காவல் நிலையங்கள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் கஞ்சா கும்பல்களுக்கு இடையே மோதல்; ஒருவருக்கு அரிவாள் வெட்டு