அரசு பள்ளிகளை மூடப்போவதாக வந்த தகவல் பொய். அப்படி ஒரு எண்ணமே அரசுக்கு இல்லை; அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பள்ளிகளில், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள காரணத்தால், 890 அரசு பள்ளிகளை கல்வித்துறை மூடப்போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
இந்த செய்தி உண்மை அல்ல என தற்போது அறிவித்திருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். தமிழகத்தில் 37,211 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.
8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 சுயநிதி பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்திற்கும் அதிகமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
இதில் 900 அரசு பள்ளிகளில் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருப்பதாக, சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதில் 890 பள்ளிகளில் ஒரு வகுப்புக்கான மாணவர்களின் எண்ணிக்கை 10க்கும் குறைவாக உள்ளது.
இதனால் அந்த பள்ளிகளை மூடி விட்டு, அருகில் உள்ள பள்ளிகளுடன் மாணவர்களை இணைக்கலாம், என்ற எண்ணத்தில் அரசு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த தகவல் முற்றிலும் பொய் என மறுத்திருக்கும் அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்க என்ன செய்யலாம்? என்ற ஆலோசனையில் தான் அரசு இருக்கிறதே தவிர, அரசு பள்ளிகளை மூடும் எண்ணமில்லை எனக்கூறியிருக்கிறார்.