தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவில் பள்ளி, புழு கிடப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
TN Breakfast Scheme Expansion: தமிழ்நாட்டில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டுக்கே இந்த திட்டம் முன்னோடியாக திகழ்ந்து வரும் நிலையில், நகர்புற பகுதிகளில் செயல்படும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவுத்திட்டம் இன்று முதல் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்
இனி முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மூலம் 37,416 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 20 இலட்சத்து 59 ஆயிரம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். சென்னை மயிலாப்பூர், புனித சூசையப்பர் தொடக்கப் பள்ளியில் விரிவுப்படுத்தப்பட்ட காலை உணவுத்திட்டத்தை பஞ்சாப் முதல்வர் பகவாந்த் மான் தொடங்கி வைத்தார். அவருக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், இந்தத் திட்டத்தால் இருபது இலட்சம் குழந்தைகள் சாப்பிடுகிறார்கள் என்றால், இதைவிட மனநிறைவு என்ன இருக்க முடியம்? என்று தெரிவித்து இருந்தார்.
பள்ளி மாணவர்கள் உணவில் பல்லி
இந்நிலையில், காலையுணவின் தரத்தை உயர்த்தாது திட்டத்தை மட்டும் விரிவுபடுத்துவது பெரிதாக பலனளிக்காது என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறுகையில், ''தேசிய கல்விக் கொள்கையின் (NEP) அங்கமான காலை உணவுத் திட்டத்தை நகர்ப்புறங்களிலுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்திருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தங்கள் மனதுக்கு நிறைவான இந்நன்னாளில், சமீபத்தில் தாராபுரம் அரசுப் பள்ளியிலும் திருவாரூர் பூனாயிருப்பு அரசுத் தொடக்கப் பள்ளியிலும் வழங்கப்பட்ட காலையுணவில் பல்லி விழுந்து கிடந்ததை, நியாபகப்படுத்த விரும்புகிறேன்.
ஊசிப்போன உணவை கொடுப்பது தான் சாதனையா?
இவை வெறும் எடுத்துக்காட்டுச் சம்பவங்களே. காலையுணவில் நடக்கும் அனைத்து குளறுபடிகளையும் வரிசைப்படுத்த வேண்டுமென்றால் சீனப் பெருஞ்சுவர் போதாது என்பதே உண்மை.பிஞ்சுக் குழந்தைகளின் பசியாற்ற வேண்டிய காலையுணவில் புழு முதல் பல்லி வரை கிடக்கிறதே, அது விடியா அரசின் விழிகளுக்குப் புலனாகவில்லையா? ஊட்டச்சத்து மிக்கதாக இருக்க வேண்டிய உணவை நெடுந்தூரத்தில் இருந்து சமைத்துக் கொண்டு வந்து ஊசிப்போன உணவாக மாறவிடுவது தான் திராவிட மாடலின் சாதனையா?
குளறுபடிகளை மறைக்க வேண்டாம்
உணவு எனும் பெயரில் எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம், அரசுப் பள்ளியில் படிப்பது ஏழை எளிய குழந்தைகள் தானே என்ற அலட்சியமா? அல்லது, போலி விளம்பரங்களின் மூலம் காலையுணவில் நடக்கும் குளறுபடிகளை மறைத்துவிடலாம் என்ற எண்ணமா?'' என்றார்.
