Swell wholesale farmers markets weekly markets and connect the farmers Idea
மதுராந்தகம் நகரில் நடைபெறும் வாரச் சந்தையையும், உழவர் சந்தையையும் மாவட்ட நிர்வாகம் இணைத்தால் வியாபாரம் பெருகும் என விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனர்.
மதுராந்தகம் நகராட்சிக்கு உள்பட்ட கடப்பேரி இரயில் நிலையம் அருகே காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை விற்பனைக் குழு சார்பில் கடந்த 10.9.2009 அன்று 24 கடைகள் கொண்ட உழவர் சந்தை தொடங்கப்பட்டது.
மதுராந்தகத்தைச் சுற்றியுள்ள மாம்பாக்கம், முதுகரை, பாலூர், பவுஞ்சூர், சித்தாமூர், அருங்குணம், தேவாத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள், தாங்கள் விளைவித்த காய்கறிகளையும், பழவகைகளையும் இந்த உழவர் சந்தைக்கு விற்பனைக்காகக் கொண்டு வருகின்றனர்.
உழவர் சந்தையில் விற்பனை குறைந்து வருவதாலும், இங்கு 24 கடைகள் இருந்தாலும், தற்போது 8 கடைகள் மட்டுமே செயல்படுவதாலும் போதுமான அளவு வியாபாரம் நடைபெறுவதில்லை. இதனால், கீரைகள், காய்கறிகள் வீணாகின்றன. இதற்கு பொதுமக்கள் இங்கு வராததே காரணம்.
மேலும், இந்த உழவர் சந்தையை மேம்படுத்த மாவட்ட வேளாண்துறை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததும் ஒரு காரணம். இதனால், விவசாயிகளும், வியாபாரிகளும் நட்டத்துக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில், மதுராந்தகம் நகரில் அரசு பொது மருத்துவமனை சாலையில் திங்கள்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. அங்கு ஏராளமான வியாபாரிகள் நடைபாதையில் கடைகளை அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். இதனால், அவசர நேரத்தில் அவசர ஊர்தி 108 வாகனம் வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.
இங்கு செயல்பட்டு வரும் வாரச் சந்தையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், பொதுமக்கள் வருகை குறைவாக உள்ள உழவர் சந்தையுடன் வாரச் சந்தையையும் இணைத்தால், வியாபாரமும் அதிகளவில் இருக்கும், காய்கறிகளும் வீணாவதைத் தடுக்க முடியும்.
எனவே, இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்தனர்.
