ஜெயலலிதா இறப்பில் சந்தேகம்; சி.பி.ஐ விசாரணை கோரி போராட்டம்…
திருச்சி,
திருச்சியில், ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே சிபிஐ விசரணை நடத்தக்கோரியும் மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தக்கோரியும் மக்கள் மறுமலர்ச்சி கழகம் சார்பில் திருச்சியில் இரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அந்த கட்சியினர் அறிவித்திருந்தனர்.
அதன்படி நேற்று மக்கள் மறுமலர்ச்சி கழக தலைவர் வழக்குரைஞர் பொன். முருகசேன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் இரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சந்திப்பு இரயில் நிலையத்தின் மூன்றாவது நடைமேடை வழியாக உள்ளே நுழைந்தனர்.
இது குறித்து ஏற்கனவே தகவல் அறிந்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற கண்டோன்மெண்ட் காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி சந்திப்பு இரயில் நிலையத்திற்கு வெளியே அழைத்து வந்தனர்.
அப்போது அவர்கள், ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
இதனையடுத்து இரயில் மறியலில் ஈடுபட முயன்ற 30 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஒரு மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர்.