செந்தில் பாலாஜி வழக்கை ஜூலை 4ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளது

தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். அதன்படி, சென்னை காவேரி மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னதாக, செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும், ஆட்கொணர்வு மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம், விசாரணையை ஜூன் 22 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.

இதனிடையே, மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல், இந்த வழக்கில் தனது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என கோரி செந்தில் பாலாஜியின் மனைவி உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், அமலாக்கத் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த் மற்றும் சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்த பிறகு ஆட்கொணர்வு மனுவை எப்படி தாக்கல் செய்ய முடியும்? ஆட்கொணர்வு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து இருக்கக் கூடாது என வாதிட்டார்.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த திட்டம் தீட்டும் எதிர்கட்சிகள்..! நாளை பீகாருக்கு பறக்கும் மு.க. ஸ்டாலின்

ஆனால், ஆட்கொணர்வு மனு மீது உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது சரியானது என தெரிவித்த உச்ச நீதிமன்றம், உத்தரவில் சந்தேகப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் கருத்து தெரிவித்தது.

செந்தில் பாலாஜி வழக்கை உயர் நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வருவதால் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடுவது குறித்து நாளை முடிவெடுப்போம் எனவும், உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால் மருத்துவக் குழு அமைத்து செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி உள்ளது என்பதை அறியலாம் எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களை கருத்தில் கொள்ளாமல், சென்னை உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், வழக்கை ஜூலை 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

உயர் நீதிமன்ற உத்தரவில் உடனே தலையிட உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது அமலாக்கத்துறைக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாக பார்க்கப்படுகிறது. மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை ஜூலை 4ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் உயர் நீதிமன்றத்தில்தான் அமலாக்கத்துறை முறையிட முடியும் என்பது கவனிக்கத்தக்கது.