Sunday lockdown in Tamilnadu : ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு.. எதற்கெல்லாம் தடை.. எவற்றிற்கெல்லாம் அனுமதி..
தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை(23.01.2022) முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஊரடங்கு நாட்களில் தேவையின்றி, பொதுமக்கள் வெளியில் சுற்ற வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2 வாரங்களிலும் இதே நிலை நிடித்த நிலையில், இந்த வார ஞாயிற்றுக்கிழமையும் தமிழகத்தில் முழு ஊரடங்கு (23.01.2022) அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. வெளியூர்களிலிருந்து வருபவர்கள் தங்கள் இல்லங்களுக்கு செல்லும் வகையில், ஆட்டோக்கள், கால்டேசிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் இரயில் நிலையங்கள் மற்றும் கோயப்பேடு பேருந்து நிலையம் போன்ற இடங்களில் வழக்கமான ஆட்டோக்கள், செயலி மூலம் முன்பதிவு செய்து இயக்கப்படும் வாடகை கார்கள் பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். மாவட்ட இரயில் நிலையங்களுக்கும் மற்றும் வெளியூர் பேருந்து நிலையங்களுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே முழு ஊரடங்கு நாட்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அத்தியாவசிய செயல்பாடுகள் அனைத்திற்கும் அனுமதி உண்டு எனவும் அரசு கூறியுள்ளது.அந்த வகையில்,மருத்துவமனைகள், மருந்தகங்கள் செயல்படும். பெட்ரோல் பங்குகள் 24 மணி நேரமும் செயல்படும். உணவகங்களில் பார்சல் வாங்கிக்கொள்ள மட்டும் அனுமதி. அவரசத் தேவைகளுக்காக வெளியூர் செல்பவர்கள் வாடைகை வாகனங்களில் பயணம் செய்யலாம். திருமண உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்களுக்கு பத்திரிக்கைகளுடன் செல்லலாம். காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள் செயல்படும். புறநகர் ரயில் சேவை செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவை இருக்காது. கேளிக்கை சார்ந்த அனைத்து செயல்பாடுகளுக்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுபானக் கடைகள், மொபைல் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற கடைகள் அனைத்துக்கும் முழு தடை விதிக்கப்படுகிறது. அதேபோல வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றி வீடுகளிலேயே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளைத் தாண்டி தேவையில்லாமல் வெளியே சுற்றும் நபர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.