கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் - அரியலூர் மக்களுக்கு ஆட்சியர் அழைப்பு...
அரியலூர்
கோடைகால நீச்சல் பயிற்சி வகுப்புகள் ஆறு கட்டமாக அரியலூர் விளையாட்டரங்கில் நடக்கிறது என்றும் மாவட்ட மக்கள் இதில் பங்கேற்று பயன்பெற வேண்டும் என்றும் ஆட்சியர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் அமைத்துள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டத்தின் கீழ் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. பிரதி திங்கட்கிழமை தவிர அனைத்து நாட்களும் நடத்தப்பட உள்ளது.
அந்த வகையில், முதல் கட்ட பயிற்சி வகுப்புகள் ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த நீச்சல் பயிற்சியானது 14-ஆம் தேதி வரை நடக்கிறது.
இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 15-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரையிலும், மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்புகள் வருகிற 29-ஆம் தேதி முதல் அடுத்த மாதம் மே மாதம் 12-ஆம் தேதி வரையிலும், நான்காம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே மாதம் 13-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரையிலும்,
ஐந்தாம் கட்ட பயிற்சி வகுப்புகள் மே மாதம் 27-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 9-ஆம் தேதி வரையிலும், ஆறாம் கட்ட பயிற்சி வகுப்புகள் ஜூன் 10-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரையிலும் காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், 9 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை ஆகிய நேரங்களிலும் காலை, மாலை இரண்டு வேளையும் 12 நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்தப் பயிற்சியில் 12 வகுப்புகளில் அடிப்படை நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுத் தரப்படும். எனவே, கோடை விடுமுறையில் மாணவ, மாணவிகள் அனைவரும் அடிப்படை நீச்சல் பயிற்சி கற்று பயன்பெறவும், நீச்சல் பயிற்சி முழுமையாக கற்றுக்கொள்ளும் மாணவ,மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சான்றிதழ் வழங்கப்படும்.
உடல் திறனை மேம்படுத்தி சிறந்த நீச்சல் வீரர், வீராங்கனைகளாக உருவாகவும், தேசிய, சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்று வெற்றிப் பெறவும், அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்தவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்று அதில் அவர் கூறியுள்ளார்.