இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; சாவில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் போராட்டம்...
நீலகிரி
நீலகிரியில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி ஆர்.டி.ஓ. விசாரணை நடத்த வேண்டும் என்று உறவினர்கள் திரண்டு போராடினர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொணவக்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (35). கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி தீபா (25), மகன் ஸ்ரீதர் (2).
நேற்று முன்தினம் மாலை தீபா வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அந்தப் பகுதி மக்கள் வீட்டின் சாளரம் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது, தீபா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார்.
இதனைக் கண்டு அதிர்ந்த அவர்கள் வீட்டின் கதவை உடைத்து தீபாவை மீட்டனர். பின்னர் அவரை கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர். அங்கு தீபாவை பரிசோதித்த மருத்துவர்கள் தீபா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தீபாவின் அண்ணன் தினேஷ் குமார் கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன்பேரில் ஆய்வாளர் பாலசுந்தரம் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் தீபாவின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவருடைய உறவினர்கள் கோத்தகிரி அரசு மருத்துவமனை முன்பு திரண்டு போராடினர். மேலும், தீபாவின் சாவிற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாங்கள் வெளியூரில் வசிப்பதால் தீபாவின் மரணம் குறித்து ஆர்.டி.ஓ. உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்த குன்னூர் ஆர்.டி.ஓ. பத்ரிநாத், கோத்தகிரி தாசில்தார் தனபாக்கியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனிடையே குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, தீபாவின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறவந்தார். அப்போது தீபாவின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து தீபாவின் உடல் அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் விசாரணைக்காக ஆர்.டி.ஓ. அலுவலகம் வருவார்கள். அவர்களது கோரிக்கை படி விசாரணையை இன்றே நடத்துமாறு குன்னூர் ஆர்.டி.ஓ.விடம் கேட்டுக் கொண்டார்.
இதற்கு ஆர்.டி.ஓ. சம்மதம் தெரிவித்ததால் தீபாவின் உறவினர்கள் உடற்கூராய்வுக்கு பின் தீபாவின் உடலை பெற்றுக் கொண்டனர்.